Friday, February 7, 2014

தலைமுறைகள் -சினிமா விமரிசனம்

நீண்ட நாள் கழித்து வாத்தியார் பாலு மகேந்திராவின் படம் வெளியாவது எனக்குள் ஒரு புத்துணர்வைத் தந்து சத்யத்திற்கு ஓடி முன் பதிவு செய்ய வைத்தது. பாலு மகேந்திரா அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் அதீத மரியாதை கலந்த நட்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பாலு படம் என்றால் இசைஞானி ஒருவித தனி ஈடுபாட்டோடு இசை கூட்டுவது நீண்டு தொடரும் ஒரு கதை. கடைசிவரை அரங்கம் செல்லும் வரை என்ன படம் என்பதை புவனாவிடம் சொல்லவில்லை. `பிரியாணி`யாங்க`தகறாராங்க என்று `தலைமுறைகள்` தவிர்த்து பிறவற்றை கேட்டவரிடம் ஒரு தெலுங்கு படம் போறோம் என்று சொன்னவுடன் `முதல்லேயே சொல்லிருந்தா கிளம்பியிருக்க மாட்டேன்` னு சொல்லிட்டு எதுக்கும் மரோசரித்ரா ரேஞ்சுக்கு இருக்குமோ-ன்னு சபலத்தோடு கிளம்பினார்.

இரண்டாவது நாள் என்ற போதிலும் அரங்கு நிறையவில்லை. ஒரு நல்ல கலைஞனுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் வழக்கமாக கொடுக்கும் மரியாதை சற்றும் கூடவில்லை.

திரைப்படத்தில் பங்களிப்பு அளித்தவர்களின் பெயர்கள் வித்தியாசமான எழுத்துருவில் வடிவைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுகாவுக்கு நன்றி என போடப்பட்டதும் தமிழ்த் திரையுலகம் மதிக்க மறந்த பாலு அவர்களின் தலையாய சீடன் சுகாவை சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவருடைய `படித்துறை` படம் எடுக்கப்பட்டு முடங்கிக்கிடப்பது குறித்து இரு ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். தயாரிப்பாளருக்கும் ஒரு முட்டாள் பைனான்சியருக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனை விவகாரத்தால் தன் படம் முடங்கிக் கிடப்பதை வருத்ததோடு சொன்னார். Title போடும் போது இசைஞானி இளையராஜா பெயர் போடப்பட்டபோது கைதட்டல். படம் ஆரம்பித்த உடனே இளையராஜாவும் பினனணியில் பங்களிப்பை ஆரம்பித்துவிடுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் தொடராக வந்த கதை நேரத்தில் வந்த நடிகர்கள் சிலர் வருவது அந்த தொடரின் மற்றொரு Episode-ஆகவே நினைக்க வைக்கிறது.மகன் கிருஸ்தவ மதப்பெண்ணை மணமுடித்ததால் `பொணத்துக்கு கூட வரக்கூடாது` எனக் கடுமை காட்டும் பாலு. அந்த பழைய வீட்டின் சன்னல் பக்கத்தில் அவர் உறங்கும் காட்சியின் lighting அற்புதம். நீண்ட நாட்கள் கழித்து வரம் மகனை உள்ளே அனும்திப்பாரோ என நாம் பதறும்போது `டேய்.shoe-வை கழட்டுடா` எனும்போது கல்லுக்குள் ஈரம். குழந்தைகளின் பெயர்களுடன் `பிள்ளை`சேர்க்க சொல்லி தாத்தா சொல்லியிருப்பது தமிழ் சமுதாயத்தில் வேரூன்றிக்கிடக்கும் சாதி பிடிமானத்தை படம் போட்டு காட்டுகிறது. `வாடா லஷ்மணா` என்று நண்பனை அழைக்கும் குரல் இன்னும் காதில். தமிழ் தெரியாத பேரனும் ஆங்கிலம் தெரியாத தாத்தாவும் சந்திக்கும் முதல் காட்சியில் பேரனின் அப்பா பெயரை கேட்டு தன் ரத்தம் என்றதும் காட்டும் பாசம். பேரனை கூட்டிக்கொண்டு அவர் வெளியே போகும்போது கிராமத்தின் அழகியலைக் காட்ட நம்மையும் அழைத்து செல்கிறார் பாலு. குறிப்பாக பேரன் காலையில் `Where are you going?` எனக்கேட்டதும் `ஆத்துக்கு`என்று அவர் கூற `ஆத்துக்கு means`என்றதும் `உன் அம்மாவைகேள்` எனச் சொல்ல பையன் அம்மாவிடம் `அம்மா ஆத்துக்கு means`எனக்கேட்டதும் அவர் `river`இரு சொல்ல பையன் `river means`என்று கேட்கும்போது நாம் நம் நதிகளை நாட்டில் பராமரிக்கும் அவல நிலையை குத்திக்காட்டுகிறார் பாலு. நதிக்கரைக்கு பாலு பேரனை அழைத்து செல்லும் காட்சி அற்புதம். இது போன்ற ஆற்றை அழகாக படம் பிடித்தவர் யாரும் இலர். அது எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணமே என் மனதில் ஓங்கி இருந்தது. ஆற்றங்கரை அருகில் காட்டில் தாத்தாவும் பேரனும் நடக்கும் காட்சியில் இளையராஜா பின்னணியில் ஒலிக்க வைக்கும் பறைவகளின் ஒலிகள் காதுக்கு விருந்து.மனதிலே சிலிர்ப்பு.மேதமையின் வெளிப்பாடு.[ மழைக் குருவியின்மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கும் அற்புத ஒலி, அக்கக்கா குருவியின் ஓசை ஒலி] `தியோடர் பாஸ்கரனின்` கட்டுரையை படமாக்கியது போன்ற ஒரு அற்புத நிலை. ஒரு இடத்தில் விடியலை பாலு படமாகியிருக்கும் விதம் அட்டகாசம். நீண்ட நாள் கழித்து பயந்து கொண்டே வரும் மகனின் நண்பனைப் பார்த்து`எங்கடா ஆளயே காணோம்.திருட்டு கல்யாணத்துக்கு கையெழுத்து போட்ட பய இல்ல நீ`எனும் போது குபீர் என்ற சிரிப்பலை அரங்கில். பேரனும் தாத்தாவும் ஆளுக்கொரு மரத்தடியில் ஒதுங்கும்போது பேரன் `Grandpa, that tree is burning`எனும் போது `பின்னாடி நம்ம லஷ்மனந்தான்.அவனுக்கு சுருட்டு புடிச்சாதான் வரும்`எனும்போதும் சிரிப்பு. பேரனுக்கு தாத்தா திருக்குறள் சொல்லித்தருவதும் தாத்தாவுக்கு பேரன் jack அண்ட் jill சொல்லித் தருவதும் அருமையான location-ல் படமாக்கப்பட்டுள்ளது.

மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக வளரும் அன்னியோன்யம் கவித்துவமாக படமாக்கப்பட்டுள்ளது.அரங்கை விட்டு வெளியே வந்தும் அகலாதவை பாலுவின் சற்றே விந்தி நடக்கும் காட்சியும் ஜன்னல் அருகே சாய்வு நாற்காலியில் அவர் குறுந்தூக்கங்கள் போடும் காட்சியும்தான். இது போல குறைந்த budget-ல் நிறைவாக எடுக்கப்படும் படங்களுக்கு அதிக வரவேற்பை கொடுக்க தமிழர்கள் முன் வரவேண்டும்.

திரை விமரிசனம்-- இது நம்ம கிராமம்

சத்யத்தில்தான். ஆனால் இந்த முறை தனியாக.எல்லோரும் சேர்ந்து போவதற்குள் படம் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக.படம் வந்த இரண்டாம் நாள் கொட்டகை வெறிச்.வெளியே பிராமணாள் மட்டும் என்று போட்டிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம்.படம் ஆரம்பிக்கு முன் பக்கத்து சீட் மாமா மாமியிடம்`கோலங்கள்ல தேவயானி மாமனாரா வருவானே அவன் எடுத்த படம்`னு விளக்கம்.

1938-45 காலகட்டத்தின் அக்ராஹர சூழ்நிலை படமாக்கப்பட்டுள்ளது.கேரளம் மற்றும் நாகர்கோயில் பகுதிகளில் அக்ரஹாரத்தைத்தான் கிராமம் என குறிப்பிடுவர். ராவ்பகதூர் சுப்பிரமணிய சர்மாவின் மகனின் பூணல் கல்யாணத்தில் படம் ஆரம்பிக்கிறது.வீட்டில் ஆச்சாரமாகவும் குடும்பத்தினரிடம் கறாராகவும் இருக்கும் மணி சாமி சின்ன வீட்டுக்கு போகும்போது சுபாவம் மாறி விடுகிறார். ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பெண்கள் என்று வரும்போது கடுமையான கட்டுப்பாடுகள்.அதுவும் விதவைப் பெண்களுக்கு குறிப்பாக.படத்தில் பாட்டியாக வரும் சுகுமாரியின் நடிப்பு அற்புதம்.குறிப்பாக நாவிதர் அவர் தலையை மழிக்கும் காட்சியில் அவர் காட்டும் முக பாவனைகள் பிரமாதம்.நாவிதர் மாஸ்டராக வரும் நெடுமுடி வேணுவிடம் `இது வில்சன் துரை கொடுத்த கத்தியாக்கும்`என்பதும் அதே வசனத்தை பாட்டியிடமும் சொல்வதும் நல்ல நகைச்சுவை. சற்றே மனநிலை பிறழ்ந்தவராக வருபவர் [பெயர் முடிவில் ஏதோ கலாமண்டலம்-னு வருகிறது]`மாஸ்டெர் அக்குளை செரச்ச கத்திதான் பாட்டி தலையையும் சிரைக்குதுது`னு அங்கதமாக சொல்கிறார்.பாத்திமா பாபு மற்றும் அவரது அக்காவாக வரும் Concubine பாத்திரம் நாராயணி,நெடுமுடி வேணு இவர்களது வீட்டு நடைமுறைகள் முரணாக [listless] அரைவேக்காட்டுத்தனமாக படைக்கப்பட்டுள்ளன. Y.G.மகேந்ரா நளினி பாத்திரங்கள் படத்தின் பெரும் பலவீனம். வீட்டின் புழக்கடை அட்டகாசம். கல்யாணத்திற்காக பத்து வயது பெண் அதிகாலையில் எழுப்பப்படுவதும் அது இன்னும் தூக்கம் வருதும்மா என்று அழுவதும் ஊஞ்சலில் தூங்கித் தூங்கி வழிவதும் வெகு இயல்பு.அந்த காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கூட எளிமையாக கொஞ்ச நபர்களுடன் திருமணம் நடத்துவதை நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இன்று கும்பலைக் கூட்டி ஏகப்பட்ட அயிட்டங்களைப்போட்டு ஜனங்களை திணறடிக்கும் கூட்டம்தான் அதிகம். இவர்கள் ஜீரணத்திற்கு Gelusil பாயாசம் போடலாம்.ஒரு கால கட்டத்தை ஒட்டி எடுக்கப்படும் இது போன்ற படங்களில்தான் அந்த காலத்து கில்லித்தாண்டு, பேப்பந்து போன்ற இன்று அருகிப்போன விளையாட்டுகளை காண முடிகிறது.

ஒளிப்பதிவு அதிஅற்புதம்.நெடுமுடி வேணு கோக்ஷ்டியினர் நடத்தும் கூத்துக் காட்சிகள் அபாரம்.கொஞ்சம் தமிழுக்கு புதியது என்பதால் ஒரு பாத்திரம் மூலம் விளக்கியிருக்கலாம். இசைக்கூட்டலில் இன்னும் ஈடுபாடு இருந்திருக்கலாம். Period படங்கள் எடுக்கும்போது சிறுசிறு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் கொள்ள வேண்டும்.`பரதேசி`,`நாடோடித் தென்றல்`படங்களில் இதை முழுமையாகக் காணலாம். ஆனால் இதில் நாதஸ்வர வித்வான் ஒரு இடத்தில் வாட்ச் கட்டிக்கொண்டு வாசிப்பது முரண்.எனக்கு தெரிந்து அந்த காலகட்டத்தில் பாக்கெட் வாட்ச்-தான்.

மோகன்சர்மாவிடம் பணம் இருக்கிறது.அதனால் இது போன்ற படத்தை எடுத்து தன் கலை அரிப்பை நிவர்த்தி செய்து கொண்டுவிட்டார்.இது போன்று சிறுதொகையில் படம் எடுக்கும் கனவு நமக்கும் உண்டு.காலம் கூடட்டும். நம் கனவும் நிறைவேறும்.

ஆடிய ஆட்டமென்ன ..............

பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும்வரை கடுமைமையான வேலைப்பளு. அதற்கு இரண்டு நாள் முன்னதாகத்தான் கைலாஷ் chicken-pox-ஆல் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு பத்து நாள் ஓய்விற்கு பின் கோவை கிளம்பி கல்லூரி சென்று அப்படியே பொங்கலுக்கு இலால்குடி வருவதாக திட்டம். முதலில் சமயபுரம் மட்டும் சென்று வருவதாய் இருந்த திட்டத்தை மாற்றி மேலும் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அப்படியே ஒரு வருடத்திற்கு மேல் போகாமல் விடுபட்டுப்போன குலதெய்வம் வைதீஸ்வரன்கோ விலுக்கும் போக முடிவெடுத்து எல்லாவற்றையும் மாற்றியமைத்தேன். திட்டமிட்டபடியே எல்லா நடக்க வைத்தீஸ்வரன்கோவில் போய் திரும்பி இலால்குடி நெருங்கையில் நெற்றிப்பொட்டில் ஊசி குத்துவது போன்ற ஒரு உணர்வு. வீட்டுக்கு வந்து முகம் கழுவியபின் முகத்தை கண்ணாடியில் பார்க்கையில் நெற்றி முழுவதும் சிறுசிறு வேர்க்குரு போன்று இருந்தன. முதுகும் சற்று அரிக்க புவனாவும் கைலாஷும் அம்மை என்று உறுதி செய்தனர். மேனேஜர் முதலிலேயே சொன்னபடி தடுப்பு ஊசி போடாத தவறை உணர்ந்தேன். சரி மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க என்ன செய்யலாம் என உடன் யோசித்தேன்.சென்னை போய்விடலாமா? முடியுமா?விடுவார்களா? ஒரு வழியாக மாடி அறையில் quarantine-ல் இருக்க முடிவெடுத்தேன்.

அடுத்த நாள் காலை மேனேஜர்-க்கு தொலைபேசிவிட்டு கைலாஷ் ஆலோசனைப் படி Dr.சத்தியநாதனை சந்தித்து தீவிரத்தை குறைக்க முடிவெடுத்தேன். அவரும் Chicken-pox என உறுதி செய்து சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். புவனாவிற்கு வராமல் இப்போது தடுப்பூசி போட்டால் பலனிருக்காது என்பதையும் தெரிவித்தார். கைலாஷுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் நமக்கும் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக அம்மையின் தீவிரம் அதிகமாகி அடுத்த நாள் மெல்ல மெல்ல வேறு ஒரு உலகத்திற்குள் slip-ஆகி சென்றேன்.பசி தூக்கம் மறந்தேன் அடியோடு. கடும் உடல் வலி. தலை முதல் கால் முட்டி வரை மகமாயியின் தீவிர விளையாடல்.பிழைப்பதே கடினமோ என்ற எண்ணம் வேறு என்னுள். இந்த நேரங்களில் புவனாவின் மன உறுதியும்,கவனிப்பும்தான் என்னை சற்றே ஆசுவாசப்படுத்தும்.

நான்காம் நாள் நல்ல இரவுத் தூக்கதிற்குபின் விழித்த எனக்கு ஒரு புத்துணர்வு பாய்ந்தது போன்ற உற்சாகம். சற்று நேரத்தில் அகோரப் பசி. ஒரு சில இட்லிகளை விழுங்கியபின் மதியம் நல்ல பசியில் ரசம் மற்றும் மோர்சாதம். உள் அளவில் பழைய உற்சாகம் மீண்டும்.வெளித்தோற்றமோ மற்றவர்களை பயங்கொள்ளச்செய்யும் நிலை.

புதனன்று முதல் தண்ணீர் என்று அம்மாவும் புவனாவும் முடிவு செய்து காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பிலைகொத்துகளை போட்டு இயற்கையாக நீரை சூடுபடுத்தும் பணியில் இறங்கினர். மதியம் ஒருமணி வாக்கில் ஒரு பாத்திரத்தில் பாதம் பாயாசத்தை ஒத்த திரவத்தையும் [ பருத்திப் பால்-தழும்புகளை உடன் மறையச் செய்ய ] மற்றொரு கிண்ணத்தில் பச்சையாக நல்ல வாசனையோடு சரவண பவன் சட்னியை நினைவு படுத்தும் கலவையையும் ஒப்படைத்து நன்றாக உடலில் தடவி சற்றே ஊறியபின் குளிக்க சொன்னார்கள்.அப்படியே துணியில் வார்த்த இட்லி ரெண்டு கொடுத்தா உள்ளே உடறேன்னு சொன்னேன். எப்பவுமே எனக்கு துணியில் வார்த்த இட்லிதான் பிடிக்கும்.அதன் clone-ஆன வழவழ-ன்னு இருக்கும் குக்கர் இட்லியை கண்டால் எனக்கு ஆகவே ஆகாது. பின்னர் கைபேசியில் நண்பர் சேகருடன் பேசும்போது `இப்போது நான் படுத்திருப்பது.நீ காலில் அடிபட்டு படுத்தது இதெல்லாம் நமக்கு ஒருவகை forced ரெஸ்ட்-தான்.இல்லாவிட்டால் நாம ஓடிக்கிட்டேதான் இருப்போம்`னு சொன்னேன்.

என்ன புத்தகக் கண்காட்சிக்கு போக போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடி. நல்ல வேளை.கடைசி நாள் சென்ற நண்பருக்கு கைபேசி வாங்க உத்தேசித்த புத்தகப் பட்டியலை சொல்ல அவர் அப்படியே வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

வெள்ளை யானை- ஜெயமோகன்
அஜ்னபி - மீரான் மைதீன்
தூப்புக்காரி- மலர்வதி
வெலிங்டன் - சுகுமாரன்
பூக்குழி- பெருமாள் முருகன்
மரப்பல்லி- வா.மு.கோமு
ஜின்னாவின் டயரி - கீரனூர் ஜாகிர்ராஜா

இந்த முறை புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம் காலச்சுவடால் வெளியிடப்பட்ட மருதுவின் கைவண்ணத்திலான பெண் ஆளுமைகளின் காலண்டர்.

இப்படியே மேலும் ஐந்து நாள் ஓய்விற்குப்பின் திங்கள் சென்னை திரும்பினோம்.30 அன்று முதல் வங்கிக்கு செல்ல முடிவு.

6174- புத்தக விமரிசனம்

புத்தகம் : 6174

எழுதியவர் : கஸ்தூரி சுதாகர்

வெளியீடு : வம்சி பதிப்பகம்

விலை : Rs.3௦௦

6174 என்ற நாவல் குறித்து என் சகோதரர் ராஜேஷ் சிலாகித்து எழுதப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய அடுத்த நாள் வம்சிக்கு போன் செய்தேன். பவா.செல்லத்துரைதான் எடுத்தார்.` உங்கள் வங்கி கணக்கு எண் சொல்லுங்கள். பணம் அனுப்புகிறேன். 6174 ஒரு பிரதி அனுப்பிக் கொடுங்கள்` என்றேன். `பணம் இருக்கட்டும் முதலில் உங்கள் முகவரியைச் சொல்லுங்கள்.இன்றே அனுப்பி வைக்கிறேன்` என்றார். புத்தகமும் வந்தது. படிக்காமலே இரண்டு மாதம் வைத்திருந்தேன். உடல் நலம் தேற மருத்துவ விடுப்பில் ஓய்வு எடுக்கும்பொருட்டு சென்னை வந்திருந்த கைலாஷ் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டி கேட்க 6174-ஐ கொடுத்தேன். படித்துவிட்டு அருமை என்றான். பொங்கலுக்கு இலால்குடியில் போணி பண்ணிவிட வேண்டியதுதான் என நான் பையில் வைத்துக்கொண்டேன்.

நாவல் நன்கு விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒன்று. தமிழில் ஒரு சீரிய முயற்சி. ஆசிரியர் சுதாகருக்கு பாராட்டுகள். Dan Brown-ன் பாதிப்பு நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. சுஜாதா இருந்திருந்தால் சுதாகரைக் கொண்டாடியிருப்பார். அருமையான விமரிசனம் கொடுத்து `எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்` என அடையாளம் காட்டியிருப்பார். சுலபத்தில் புத்தகக் கண்காட்சியில் லட்சம் பிரதி விற்றிருக்கும். இதே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் மில்லியன் கணக்கான விற்பனையை எதிர்கொண்டிருக்கும். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இதைப் படிக்க ஆலோசனை சொல்லலாம். கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லை.

+கள்

அனகோண்டா பெயர்க்காரண விளக்கம் அற்புதம். நாவலின் அசாத்திய வேகம் வாசகனை பிரமிக்க வைக்கிறது. கோலத்தில் இவ்வளவு விஷயமா? எனக்கு கோலம்னாலே மைக்கேல்மதனகாமராஜனில் பாட்டி பேசும்` என் பேத்தி வாசல்ல கோலம் போட்டுண்டிருந்தா. இந்தப் படுபாவி அலங்கோலம் பண்ணிட்டான்`-ங்கிற கிரேசியின் வசனம்தான் ஞாபகத்துக்கு வரும். `சுடலை` போன்ற அடித்தட்டு மக்களின் பெயர்களை பாத்திரங்களுக்கு சூடியிருப்பது வரவேற்புக்குரியது. 6174 நம்பர் குறித்த விளக்கம் நிஜத்தில் புல்லரிக்க வைக்கிறது. வாசகன் கண்டிப்பாக பேனா எடுத்து சரி பார்ப்பான். `ஹெர்மோப்ரோடைட்` `லோனார் லேக்` போன்ற பிரயோகங்கள் கூகுள் பார்க்கத் தூண்டும். கதை தன் முழு வேகத்தை லோனாரில் எடுக்கிறது. ரவி பாத்திரம் ஆரம்பத்திலேயே இவர்களுக்கு சமதையாக Jeffrey Archer-ன் A Matter of Honour-ல் வருவதுபோல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். கத்தி, இரத்தம்,வன்முறை குறைவு. பிரமிட் குறித்து நான் கேள்விப்பட்டதெல்லாம் அதற்குள் எதை வைத்தாலும் அதன் ஆரம்ப நிலையை அடையும் என்பதுதான். உதாரணத்துக்கு ஒரு பழைய சவரம் செய்த blade-ஐ பிரமிடுக்குள் வைத்தால் அது ஒரு நாளில் மீண்டும் சவரம் செய்யும் அளவுக்கு புதியதாக உருமாறிவிடும் என்பது போன்றவைதான். ஆனால் இந்த கதையில் பிரமிடுகள் பிரமிக்க வைக்கின்றன.

-கள்

விளிம்புநிலை வாசகர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பத்தி பிரித்தல் படுமோசம். ஆரம்ப கட்டங்களில் அனந்துவும்,ஜானகியும் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் வேகம் MGR படங்களை நினைவூட்டுகிறது. காதுகொடுத்து பொறுமையாக விஷயங்களை கேட்காமல் எப்போதும் சலித்துக் கொண்டேயிருக்கும் மெத்த படித்த கதைமாந்தர்களை படைத்திருப்பது வாசகனுக்கு வெறுப்பையூட்டுகிறது. சாரங்கன் போன்ற பத்திரங்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்து புஸ்-ஆகிவிடுகின்றன.. அடிக்கடி வெளியே போய் போன் பேசும் தேவராஜ் குறித்து சாதாரண என் போன்ற வாசகர்களுக்கே சந்தேகம் வரும்போது சடகோபன்&TEAM-க்கு சந்தேகம் வராதது நெருடலே.

400 பக்கங்களுக்கு மேற்பட்ட விஞ்ஞான புனைவு என்பது சாதரணமாக எல்லோருக்கும் கைகூடும் விஷயமல்ல. அதுவும் தமிழில். படிப்பு ஆர்வம் இப்போது குழந்தைகளிடத்து குறைந்து வருவதை இது போன்ற அறிவியல் புனைகதைகளை படிக்கத் தூண்டுவதன் மூலம் நிவர்த்திக்கலாம். இதன் வீச்சை பரவலாக்குவது நம் கையில்தான். தன் தின சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் இழக்கும் தந்தைகளையே அதிக அளவில் கொண்டுள்ள நம் தற்போதைய சமூகம் இந்த புத்தகங்களையா தன் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும்?


`OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்



பொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் எனக்கு என்றுமே பெருவிருப்பம் இருந்தது இல்லை. மாமியார்களையும், அழகு சுந்தரங்களையும் [அடியாட்கள்] பார்த்து வெறுப்பே மிஞ்சியது.மக்களின் ரசனையை நினைத்து வேதனைதான் பொங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தினம் புவனா இரவு பத்து மணிக்கு மேல் ஏதோ தொடர் பார்ப்பதும் தொடர்ந்து கலகலவென்று சிரிப்பதுமாக இருந்தது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று ஒரு நாள் பார்க்க உட்கார்ந்தேன். கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. இன்றைய அலுவலக சூழல் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வெடிச்சிரிப்பு,நொடிக்கு நூறு தரம் மச்சான் மச்சான் என்று அவர் சகாக்களை விளிப்பது,கார்த்திக்கின் காந்தக்குரல்,ராஜியின் அப்பாவித்தனம் எல்லாம் யதார்த்தமாக இருப்பது புத்துணர்ச்சியை பார்ப்பவர்களுக்கு தருவது நிதரிசனம். இவற்றுக்கெல்லாம் சிகரமாக தொடரில் இருக்கும் விஷயங்களாக எனக்கு படுபவை இரண்டு.








1. விஸ்வநாதனின் மேலாண்மை குணாதிசயங்கள். அவருடைய பதவிக்கேற்ற கம்பீரமான முடிவெடுக்கும் திறன், தன் கீழ் பணியாற்றுபவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் திறன், அவர்கள் மீது அவர் வைத்துருக்கும் அசாத்திய நம்பிக்கை, ஒவ்வொருவரையும் அவர் எடை போடும் திறன், கம்பெனியின் முன்னேற்றத்தை பற்றி எந்நேரமும் சிந்திக்கும் தன்மை, பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் உறுதி காட்டுவது போன்றவை அந்த பாத்திரத்தின் மேல் பெரிய அளவில் மரியாதையை உண்டு பண்ணுகின்றன. இவர் பாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதை அவர் பெயரில் இப்போது விளம்பரங்கள் வெளியாவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. லஷ்மி. இவர் முகத்தில் எப்போதும் ஒருவித புத்துணர்ச்சி. குரலோ கற்கண்டும் அதி மதுரமும் கலந்த ஒன்று. இளமைத் துள்ளல் நிரம்பிய இவர்தான் என்னைப் பொறுத்தவரை தொடரின் நாயகி. நிஜப்பெயர் மதுமிலா. இயல்பான அழகி.

மதனாக வருபவரும் அசத்துகிறார் அப்பாவியாக. அவர், அவர் காதலி மற்றும் அவர்களுடைய அலுவலகத்தோழி TRACK`ம் நன்றாகவே உள்ளன.

குறைகளும் உள்ளன. HR MANAGER விஸ்வநாதனிடம் பேசும்போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே தனியாக பேசுவது தொடர்வது மலின உத்தி. HARDWARE TEAM-ஆக வரும் குடி கும்பலின் பிதற்றல்கள் பெரும் பலவீனம். LAPTOP மற்றும் PROJECT விஷயங்களில் ராஜி மீண்டும் மீண்டும் அலட்சியமாக இருப்பதாக காட்டுவது இயல்பாக இல்லை.

எனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட `நுக்கட்` என்ற ஹிந்தி தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு இணையான ஒன்றை `OFFICE` பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். மற்ற தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரும் எரிச்சலையும்,பயத்தையும் இந்த தொடர் கொடுத்திருப்பது கண்கூடு. ஒளிபரப்பப்படும் நேரம் [10-10.45] கூட யாரையும் முணுமுணுக்க வைப்பதில்லை. `OFFICE` தொடர் ஒரு `STRESS RELEIVER`ஆக பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியுடன் உறங்க அனுப்பி வைக்கிறது. பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்குப் பின் எந்த தொடரும் என்னை எழுதத் தூண்டியதில்லை. TEAM OFFICE-க்கு என் வாழ்த்துக்கள். MAY THIS TRIBE INCREASE.

Sunday, December 15, 2013

பாரதி மெஸ்

இலால்குடி பினாத்தல்கள்

திருவல்லிக்கேணி என்றாலே நினைவுக்கு வருவது பார்த்தசாரதி கோவிலும், பாரதியார் இல்லமும்,மேன்ஷன்களும்தான். இந்த மேன்ஷன்களில் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் வேலை நிமித்தம் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அறை நன்றாக அமைகிறதோ என்னவோ சாப்பாட்டைப் பற்றி துளியும் கவலைப்படத் தேவையில்லை. திருவல்லிக்கேணியை Bachelor`s Paradise என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இருக்கும் இங்கு உள்ள தரமான உணவகங்களின் உணவு வகைகள். இங்கு சாப்பிடுவோருக்கு பாக்கெட்டிலோ,குடலிலோ ஓட்டை விழ வாய்ப்பில்லை.நான் சென்னைவாசியாகி ஜாகை பார்த்து மூன்று மாதம் கழித்துதான் புவனாவை கூட்டி வந்தேன்.அதுவரை என்னைப் பார்த்துக்கொண்டது மெஸ்கள்தான்.கைலாஷும்,என் தங்கை பையன் விக்னேஷும் வந்து என்னோடு ஒரு வாரம் தங்கியிருந்து `மாமா நீ நல்லா Bachelor Life`ஐ enjoy பண்றேன்னு certificate கொடுத்தான். சில நாட்களாகவே இந்த மெஸ்கள் குறித்து எழுதும் எண்ணம் இருந்தது.இப்போதுதான் முடிந்தது.

பாரதி மெஸ்- The Pride of Tiruvallikeni

நான் Triplicane வந்து இரண்டாம் நாள்தான் பாரதி மெஸ்-ஐ பார்த்தேன். இரண்டு இட்லியும்,வெண் பொங்கலும் சாப்பிட்டேன்.பொங்கலில் ஏகப்பட்ட முந்திரி. பாரதியின் சுத்தம் என்னைக் கவர்ந்தது.சற்றே கவனித்தபோதுதான் கடை ஒரு கொள்கையோடு [principle] நடத்தப்படுவது தெரிந்தது.சுவரெங்கும் பாரதியின் அந்த கால தனி மற்றும் குடும்பப் படங்கள். பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் பாரதி பாடல்கள்.அலமாரியில் தள்ளுபடி விலையில் பாரதி புத்தகங்கள்.`தங்களுக்குத் தேவையில்லாத புத்தகங்களை இங்கே கொண்டு வந்து போடவும்` என்று ஒரு corner.இவ்வாறாக எல்லாவற்றிலும் புதுமை பாரதியில்.பாரதியின் வெண்பொங்கலுக்கு லேசான போதை தரும் வல்லமை உண்டு. பொதுவாக எனக்கு பூரி என்றால் ரொம்பஅஅஅஅஅஅ இஷ்டம். அதனால்தான் `தங்க மீன்கள்` படத்தில் குழந்தை `இன்னிக்கு எங்க அம்மா பூரி செய்றாங்க.அதனால நாளைக்கு குளத்துல இறங்கறேன்`னு சொல்லும்போது என் கண்ணில் லேசான கலக்கம். நம்ம ஜாதி-ன்னு பாசம்.தமிழ் நாட்டில் உனக்குப் பிடித்த டிபன் என்ன என்று நான்கு குழந்தைகளை கேட்டால் மூன்று குழந்தைகளின் பதில் பூரியாகத்தான் இருக்கும். பூரி ஏன் செட்-ஆகத்தான் வருகிறது [ஓட்டலில்] என்று என் ரொம்ப நாள் சந்தேகம் இன்னும் தீரவில்லை. அந்த நாட்களில் பள்ளிகளில் பூரி செட்டுக்காகவே NCC-ல் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்த கூட்டம் உண்டு. அந்த நாட்களில் எல்லாம் கல்யாணத்தில் பூரி மசால் போடும் பழக்கம் இல்லை.௨௦௦௦-த்தின் ஆரம்பத்தில் ஒரு கல்யாணத்தின் காலை டிபனில் பூரி மசாலை பதம் பார்த்தபின் மொய்க் கவரைப் பிரித்து மொய்யை அதிகப்ப்படுத்தினேன்.அந்த காலத்தில் சில ஓட்டல்களில் பூரி செட்டுக்கு மசால் வேண்டாம் சாம்பார் போதும் என்றால் `மூன்று பூரி`கொடுக்கும் ஒரு வழக்கம் அமுலில் இருந்தது.ஆனால் பூரிக்கு மசாலைத் தவிர வேறெதையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்போது மைதா மாவினால் செய்யப்பட்டு [single-ஆக வரும்]உடலுக்கு எல்லா தீங்கையும் தரும் clone `சோலா பூரி`யை என்னால் ஏற்க முடியவில்லை.சரி பாரதிக்கு வருவோம்.பாரதியின் பூரி அப்பழுக்கிலாத அக்மார்க் ராகம்.கண் முன்னால் எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்டு கருப்பு துகள்கள் சற்றும் இல்லாதது.தொட்டுக்கொள்ள மசாலும் தேங்காய் சட்னியும்.பாரதியில் சாம்பார் சட்னி வகைகள் தேவையான அளவுதான்.extra கிடையாது.மதியம் சாப்பாடு உண்டு.தரமான சாப்பாடு 5௦ ரூபாய்க்கு கூட்டு காய் அப்பளம் சாம்பார் ரசம் மோர் வடை ஹாட்பேக்-ல் சாதம்.பார்சல் சாப்பாடு இலையுடன் 55 ரூபாய் சாதம் Horlicks pack போல அலுமினிய Foil-ல். இரவில் மீண்டும் டிபன் ரகங்கள். பாரதியின் சப்பாத்தியை தூக்கினால் அறுந்து விழுந்து விடும்.அவ்வளவு soft. தொட்டுக் கொள்ள கூட்டு.தயிர் வெங்காயம்,தக்காளி உருளை மசால்.[இங்கே 18 ரூபாய்.அருகிலுள்ள அடையாரில் இரண்டு சின்னது 45 ரூபாய். ஒரு முறை இரவு பாரதியில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது மெஸ் உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்திருந்த நேரம்.எப்படி விலை உயர்த்தாமல் கட்டுபடியாகிறது என்று நான் கேட்க `லாபத்தில் நஷ்டம்`என அடக்கமாக பதிலளித்தார். பாரதியில் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல உணவு.இங்கு self service-தான்.உட்கார்ந்து சாப்பிடும் வசதி கிடையாது.இங்கு எட்டு மணிக்கு ஒரு நாள் வந்து மறு நாளும் எட்டு மணிக்கு வந்தால் முதல் நாள் பார்த்த முகங்களே முக்கால் வாசி இருக்கும்.புவனா ஊருக்கு போனால் காலை பாரதியில் இரண்டு இட்லி ஒரு பூரி செட் பக்கத்திலுள்ள சபரியில் ஒரு ஸ்ட்ராங் டீ என்பது என் வழக்கம்.பாரதியின் புது கிளை பாரதி பிறந்த நாளில் CNK- ரோடில் OPP  CHEPAUK-ல். பாரதி போன்ற உணவகங்களுக்கு அரசு பல சலுகைகளை தரலாம்.நான் சென்னையிலிருந்து மாற்றப்பட்டு பின் சென்னை வர நேரம்  போதெல்லாம் பாரதி வந்து கண்டிப்பாக ஒரு வேளை  சாப்பிடுவேன்.



















Monday, June 24, 2013

உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் எந்த அறிபறியுமில்லாமல் மெதுவாக brush-ல் பேஸ்ட்-ஐ போட்டுக்கொண்டு சேரில் உக்காந்து டிவி-ஐ on செய்தேன். உடன் ஒரு பெண் `உங்க பேஸ்டில் உப்பு இருக்கா?` என்று ஏதோ ரசம் குழம்பில உப்பு இருக்கா என்று கேட்பது போல கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சி. `உப்பில்லா பண்டம் குப்பையில `என்று அந்த காலத்தில் பெரியவங்க சொன்னது பேஸ்ட்-க்கும் பொருந்துமா என்று குழம்பினேன். ஒரு வேளை பேஸ்ட்-ல்லாம் உப்பு போட்டுதான் தேய்க்கணுமா நம்ம பாட்டுக்கு வெறுமனேயே ரொம்ப நாளா தேய்க்கிறோமே என்று சந்தேகத்தில் tube முழுக்க தேடித் பாத்தா அப்படி ஒண்ணும் போடலை. இதெல்லாம் ஒரு மார்க்கெட்டிங் ஜிம்மிக்ஸ். ஏன்னா இப்பல்லாம் மக்களுக்கு loyalty இல்ல. மாத்திக்கிட்டே இருக்கணும்.ஒன்னே ஒண்ணுதான் மனுஷனால மாத்த முடியாது. அதனால்தான் ஒவ்வொரு கம்பெனிகாரனும் ஒரே பேர்ல லேசான பெயர் மாற்றத்துடன் வெவ்வேறு பற்பசைகளை உப்பு போட்டு சக்கரை போட்டு விக்கறானுங்க. உதாரணத்துக்கு Pepsodent, pepsodent-g, pepsodent 2 in 1, pepsodent total gumcare. colgate plain, colgate total, colgate gel, colgate germi check, colgate sensitive. 

என்ன பேஸ்டு-ங்க வந்தாலும் நம்ம  கோபால் பல்பொடிக்கு ஈடாகுமா? அந்த காலத்துல எங்க தாத்தா வீட்டுக்குப் போனா ஒரு பொட்டலம் கோபாலை எடுத்துக்கிட்டு அப்படியே தேய்க்கிற மாதிரி காலை டிபனா பொட்டலம் முழுசையும் வாயில கமுத்துடுவோம்.`இந்தியா. இலங்கை,மலேஷியா ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவை பெற்றது கோபால் பல்பொடி. உங்கள் பற்களை முத்து போல பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி`ன்னு ஆல் இந்தியா ரேடியோ வேறு ஒரு பக்கத்தில் முழங்கும் போது வாயில் எச்சில் ஊறும். அப்பல்லாம் ஊருல பாதி பய ரோஸ் விரலோடதான் ஸ்கூலுக்கு வருவானுங்க.ஆனா 1431 பயோரியா பல்பொடி-னு ஒன்னு இருக்கும். காரம் ரொம்ப இருக்கும். அந்த காலத்திலேயே பாருங்க 1431-னு registration நம்பரோட வித்திருக்கான்.இப்ப இருக்கிற Baskin Robbins @ 31 போல.நஞ்சன்கூடு-ன்னு ஒரு பல்பொடி வரும். காட்டம்தான். என்ன பேஸ்டில் உள்ள mouthwash பல்பொடியில இருக்காது. அப்ப பேஸ்ட்-னு பாத்தீங்கன்னா colgate-ம் forhans-ம் தான். பலபேரு அப்ப வேப்பங்குச்சிதான். இன்ஜெக்க்ஷன் பல்பொடி-னு ஒன்னு `ஆடும் பல் அசையாது` என்ற logo-வோடு வரும். அது உண்மையிலேயே ஈறுகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.பேஸ்ட் சோப் விஷயத்துல நம்ம நாட்டுக் கம்பெனிங்க பன்னாட்டு கம்பெனிகளிடம் தங்களது market ஷேர்-ஐ இழந்து வருடக் கணக்காகி விட்டது. அதனால்தான் அவன் ஆறு ரூபாய்க்கு பேஸ்ட் பண்ணி அதை இரண்டு ரூபாய்க் குழாயில் அடைத்து அதை இருபது ரூபாய் செலவு செய்து விளம்பரப் படுத்தி நம்மிடம் அறுபது ரூபாய்க்கு விற்கிறான். நான் எங்கள் வங்கியில் சில வருடங்கள் ஒரு co-op ஸ்டோருக்கு in-charge ஆக இருந்த போது ஒரு பைசா கூட சம்பாதிக்காத ஒரு ஊழியரின் வெத்து வேட்டு கணவர் `நான் மாசா மாசம் பிரஷ்-ஐ மாத்திடுவேன்`என்று சொன்னதும் எனது பறந்து விரிந்த பிரஷ்-ஐ அவனிடம் காண்பித்து இதை எப்ப மாத்தணும்-னு கேக்க ஆசையா இருந்தது.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு பாட்டி வந்தபோது பல் தேய்த்து விட்டு வந்து` நல்லா நுரை வருது. ஆனா வாயெல்லாம் எரியுது`ன்னார். அய்யோ பாட்டி எதுல தேச்சே-னு நாங்க கேட்க அவர் காண்பித்தது palmolive ஷேவிங் கிரீம். அதுலேர்ந்து பாட்டி பேரு `பாமாலிவ் பாட்டி`.

சோப்பு மேட்டர்-லயும் இதே கதைதான். Lifebuoy- சோப்ப ரெண்டா வெட்டிக்கொடுத்த பரம்பரையில வந்த நம்ம வாரிசுகள் இப்போ குளிப்பதோ dove சோப்பில்தான். சாதாரணமா ஒரு வாளித் தண்ணியில குளிக்கிறோம்னா dove-க்கு ரெண்டு வாளி. அவ்வளவு கொழ கொழா. அப்பல்லாம் சினிமா கொட்டாய்க்கு போனாதான் advertisement-லாம் பாக்கலாம்.`ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது லைபாய். லைபாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே.` `அழுக்கிலுள்ள கிருமிகளைக் கழுவிக் களைகிறது லைபாய் சோப்` அப்படினு அலறுவான். அப்போ எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வரும். அழுக்கிலுள்ள கிருமிகளைத்தான் கழுவி களையும் போல இருக்கு. அழுக்கு அப்படியே இருக்கும் போல-ன்னு. கார்பாலிக் சோப்பு-ங்கறதால லைபாய் கரையவே கரையாது.நுரையும் வராது.ரெண்டு மாசம் ஆனாலும் அப்பிடியே கல்லு கணக்கா இருக்கும். ஒரு முறை காது அடைத்துக்கொண்ட நண்பர் ஒருவரை டாக்டரிடம் அழைத்து சென்றபோது `என்ன சோப் use பண்றீங்க-ன்னு அவர் கேட்க இவர் சந்திரிகா என்றார்.நொறைனா உங்களுக்கு ரொம்ப பிடுக்குமா `என்று டாக்டர் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆமா சந்திரிகாவுல நுரை நிறையா வரும். ஆனா காரம் மூக்கில ஏறும்.பொம்மனாட்டிங்க சோப்பு போட்டு குளிக்கிற advertisement லாம் லிரில் சோப்பு வந்தப்புறம்தான்.அந்த அம்மா லா-ன்னு பாடிக்கிட்டு உற்சாகமா குளிக்கிறது இன்னும் காதிலேயே நிக்குது. இப்ப லிரில் இருக்கிற இடத்தைக் காணோம். புவனாவுடன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆன புதிதில் எங்கள் வீட்டுக்கு அவள் அண்ணன் வந்த போது பேச்சு வாக்கில் புவனா மைசூர் சாண்டல் சோப்-தான் use பண்ணுவா-ன்னு சொன்னவுடன் நான்`அய்யய்யோ சோப்பையெல்லாம் இங்க வந்தா மறந்துட சொல்லுங்க.இங்கெல்லாம் பயத்த மாவுதான்`-னு போட்டு விட்டவுடன் பார்ட்டி பயந்தே போயிட்டார். சில பேரு குழந்தைய பஜ்ஜி போண்டா-வுக்கு use பண்ற மாவையெல்லாம் போட்டு குளிப்பாட்டுவாங்க. ஜான்சன் பேபி சோப் போட்டு இப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்ரதில்ல. சில பெரியவங்க அதை போட்டு குளிக்கிறதானுலதான் அதுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கு. சோப் விஷயத்துல நன் ,கைலாஷ் லாயல்டி maintain பண்றோம்.நான் ஹமாம், அவன் பியர்ஸ் [ the only handmade soap-னு unilever சொல்லுவான். இப்ப எப்படியோ]. அப்பல்லாம் ஊருக்கு போறவன் எவன் சோப்பு பிரஷ் பேஸ்ட்-லாம் கொண்டு போவானுங்க. போற இடத்துல இருக்கிறத சந்தோஷத்தோட use பண்ணுவானுங்க.

பின் குறிப்பு: உங்க பேஸ்ட்-ல உப்பு இருக்கா-னு மிரட்டியவுடன் மிரட்சியோட டக்குனு சேனலை நான் மாத்தினா அதுல `உங்க உப்புல அயோடின் இருக்கா`னு ஒருவர் அலற அப்படியே சாஞ்சு உக்காந்துட்டேன்.