Saturday, December 20, 2014

சாகித்ய அகாடமியின் சறுக்கல்

இந்த வருட சாகித்ய அகாடமி விருதுக்கு பூமணியின் அபத்த களஞ்சியம் 'அஞ்ஞாடி' தெரிவு செய்யப்பட்டுள்ள
து பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இது இமயம், கண்மணி குணசேகரன் போன்ற எழுத்தாளர்களுக்கு செய்யப்பட்ட பெரும் துரோகம். இரு வருடங்களுக்கு முன் இந்த ஆயிரம் பக்க புத்தக வாசிப்பு முடித்தவுடன் அது ஒரு பெரும் சலிப்பையும் நேர விரய ஆத்திரத்தையுமே கொடுத்தது. அத்துடன் சில நாட்களுக்கு புத்தகங்களை தொடவே அச்சமாக இருந்தது. கதையின் எந்த ஒரு கட்டத்திலும் மண்வாசனையோ அந்த நாளைய வாழ்க்கைச் சூழலோ சரியாக சொல்லபபட்டிருக்கவில்லை என்பதே உண்மை. புதிரை வண்ணார்களைப் பற்றிய சிறந்த கதை 'கோவேறு கழுதைகள்`தானே தவிர அஞ்ஞாடி அல்ல. இதை எந்த தமிழ் இலக்கியவாதியும் ஒத்துக்கொள்வான். நான் எந்த புத்தகத்தையும் படிக்க நீண்ட நாள் எடுத்துக்கொண்டதில்லை இதைத் தவிர. கதை நடுவில் பிறண்டு நடுவில் ஒரு சரித்திர பாட புத்தகம் படிப்பது போன்று இருந்தது. விருதுக்கு தகுதியான புத்தகங்களே ஒரு வருடத்தில் இல்லாது போனால் வழங்காமல் விட்டு விடலாமே. இமையத்தின் திமுக சார்பு நிலைப்பாடு அகாடமி அவருக்கு விருது கொடுப்பதை தடுக்கிறதோ? ஒரு காலத்திலும் அவர் அரசியலையும் இலக்கியத்தையும் கலந்ததில்லை. பார்க்கப் போனால் அவர் சார்ந்துள்ள கட்சியே அவரை கொண்டாடியிருக்க வேண்டும். அது நடக்கப் போவதில்லை.

Thursday, February 13, 2014

அஞ்சலி- பாலு மகேந்திரா- ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா


தமிழ் திரையுலகம் ஒரு மிகப் பெரும் ஆளுமையை இழந்து விட்டது. எனது ஆதர்ச இயக்குனர்களில் ஒருவர். சினிமாவையே சுவாசித்து வாழ்ந்தவர். அவர் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைர வாரிசுகள் பலர். `அழியாத கோலங்கள்` மூலம் தமிழில் இயக்குனர் அவதாரம் எடுத்து தமிழனுக்கு சினிமாவின் புதிய பரிமாணங்களை காட்டியவர். சின்ன சின்ன விஷயங்களில்கூட அவருடைய touch இருக்கும்.

ஏறக்குறைய சினிமா உலகிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என என் போன்றோர் எண்ணிக்கொண்டிருந்தபோது `தலைமுறைகள்` மூலம் நடிகனாகவும் அவதரித்து பரவசப்படுத்தினார்.

பாலுவுக்கும்,இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே மற்றவர்களுக்கு பெரும் பொறாமையூட்டும் ஒரு அதீத நட்பு அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது இன்று காலை வரையில். பாலுவின் படங்களுக்கு மட்டும் அதி உன்னத பாடல்களையே இளையராஜா எப்போதும் தரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மிகப் பெரிய வெற்றிக் கூட்டணி. உதாரணத்திற்கு சில பாடல்கள்-

மூன்றாம் பிறை - கண்ணே கலைமானே

நீங்கள் கேட்டவை - ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள்

மறுபடியும் - எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு

மூடுபனி - என் இனிய பொன் நிலாவே


இரட்டை வால் குருவி- ராஜ ராஜ சோழன் நான் 

அழியாத கோலங்களில் வரும் `நான் என்னும் பொழுது ஏதோ சுகம் ஏதோ தினம்` பாடலை கேட்கும் போதெல்லாம் நான் அப்படியே சமைந்து போய்விடுவேன். மொழி கடந்த பெரும் இசை மேதை சலீல் சௌத்ரி பாலுவுக்கேன்றே தொடுத்த அற்புதமான பாடல். மகேந்திரன் இயக்கிய`முள்ளும் மலரும் `படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலுவின் மேதமை இளையராஜாவின்` செந்தாழம்பூவில் வந்தாடும்`பாடலில் வெளிப்படும். அந்த பாடலில் ஷோபா வெளிப்படுத்தும் முக பாவங்கள் நிச்சயம் பாலுவின் கைவண்ணம்தான் என்பதை அடித்து சொல்லுவேன். ஜானிக்கும் அவர்தான் ஒளிப்பதிவு. மழையில் ஸ்ரீதேவி பாடுவது போன்ற ஜானகியின் குரலில் வந்த `காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது` பாடல் காலத்தைத் தாண்டி இன்றும் முன் நிற்கிறது.

இவரது வீடு படம் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை அருமையாக பதிவு செய்திருந்தது. பாலு மகேந்திராவின் `கதை நேரம்` தொலைக்காட்சி தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயல்பான ஒன்று.

தமிழ் சினிமா ரசிகனை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் சென்றதில் பாலு மகேந்திராவின் பங்கு முதன்மையானது. அவரது ஆத்மா சாந்தியடைய தலைமை ரசிகனின் பிரார்த்தனைகள்.

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

Tuesday, February 11, 2014

குடித்ததில் பிடித்தது



குடித்ததில் பிடித்தது 

சில பானங்களின் மணமும், சுவையும் நம் நாவில் தொடங்கி சிறு வயதிலேயே மனதிலும் பதிந்து விடுகின்றன. அப்படி என்னுள் நீண்ட நாள் உறைந்திருந்தது Woodwards Gripe water. அதன் மணமும் சுவையும் என்னைப் பொறுத்தவரை unique-தான். கைலாஷ் குழந்தையாக இருந்தபோது வயிற்றுவலி என்று சொன்னவுடன் என் அம்மா சாதாரண வலிதான் Dr.கிட்ட போக வேண்டாம்.Woodwards Gripe water வாங்கிண்டு வா. ரெண்டு ஸ்பூன் குடுத்தா சரியாயிடும்-னு சொன்னவுடன் வாங்கி வந்தேன். பாட்டிலைத் திறந்தவுடன் அந்த மணம் என்னை இழுத்தது. கைலாஷ் குடித்த இரண்டு ஸ்பூன் போக பாக்கி 250 ஸ்பூனையும் நானே ஆசை தீர குடித்தேன். எனக்கு தெரிந்து நீண்ட நாட்களாக packing [ நீல நிற கவர் ] மற்றும் பாட்டில் அமைப்பு அதில் ஒட்டப்பட்டுள்ள sticker மற்றும் font-கள் மாறவேயில்லை. சில பொருட்களே இப்படி தன் தனித்துவத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளன.[ LG பெருங்காயம் கட்டி, Sunlight சோப் ]. Brand value நிபுணர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயம் இது. கவரை மாத்தி காசு பண்ணலாம் என்பதெல்லாம் மாயைதான். திருச்சி டவுன் கிளையில் நான் பணியாற்றிய பொழுது எல்லார் கண்ணையும் கட்டி கையை நீட்ட சொல்லி ஆளுக்கு ரெண்டு ஸ்பூன் Woodwards Gripe water-ஐ ஊற்றி என்னன்னு கண்டுபிடிங்கன்னு சொன்னவுடன் எல்லோரும் சரியாக சொன்னதுடன் அதன் சுவையை என்னைப் போலவே சிலாகித்தார்கள். நான் open-ஆக வாங்கி குடித்துவிட்டேன். அவர்களுக்கு தயக்கம். நான் வாங்கிக் குடுத்து அவர்கள் ஆசையையும் நிறைவேற்றி வைத்தேன்.




பண்ணையாரும் பத்மினியும்- திரை விமரிசனம்



இரண்டு நாள் வங்கி வேலை நிறுத்தம். ஆனால் நீண்ட நேரம் வெய்யிலில் நீங்கள் சில நாட்கள் நிற்கக் கூடாது என Dr. கண்டிப்பான உத்தரவு போட்டிருந்ததால் காலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள போகவில்லை. முன்னெல்லாம் வேலை நிறுத்தம் என்றால் ஊதியம் அடிபடும் என சிலர் முணுமுணுப்பர். ஆனால் இப்போதெல்லாம் இதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. இந்த ஓய்வை விரும்பி வரவேற்கின்றனர். அந்த அளவுக்கு work pressure. நான் இந்த இரண்டு நாட்களும் புவனாவை வெளியே கூட்டி சென்று திருப்தி படுத்த முடிவெடுத்தேன்.

திங்களன்று காலை tiffin மோனிஷா-விலிருந்து பார்சல். மதியம் சாப்பட்டிற்குப்பின் city center Inox-ல் பண்ணையாரும் பத்மினியும். Inox-ஐ தமிழில் ஐநாக்ச் என்று எழுதியிருப்பது எரிச்சலை உண்டு பண்ணியது. புவனா பையில் சாமார்த்தியமாக வீட்டிலிருந்து கைமுறுக்கை கடத்தி தியேட்டருக்குள் கொண்டு வந்தது திருப்தியளித்தது. மாலை அங்கேயே window shopping. அப்புறம் அப்படியே கிளம்பி மயிலை காரணீஸ்வரர் கோவில், மயிலை ஷீரடி சாய்பாபா கோவில், கபாலீஸ்வரர் கோவில். சாய்பாபா கோவிலில் சுடசுட வெண்பொங்கல் மற்றும் கபாலீஸ்வரர் கோவிலில் சக்கரைப்பொங்கல் புளியோதரை என்று சிக்கனமாகவே கதையை முடித்தேன்.

மதியம் சாப்பாட்டுக்குப் பின் தூக்கம் கண்ணை சுழட்டியது. தியேட்டரில் சுமார் 50 பேர். [50*120-Rs.6000]. படம் ஆரம்பிக்குமுன் advt. அந்த காலத்தில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் வந்தால் அந்த தியேட்டரிலிருந்து படச்சுருள் வரவரத்தான் படம் போடப்படும். அதுமாதிரி வரவேண்டியுள்ளதோ என எனக்கு சந்தேகம். நிறைய போட்டு படுத்தி எடுத்து விட்டார்கள். சரி படத்திற்கு வருகிறேன்.

ஒரு சிறுகதையை எப்படி ஒரு திரைப்படமாக மாற்றுவது என்பதை இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பத்மினி வரும் முதல் காட்சி ஒரு ஹீரோ enter ஆவதுபோல் காட்டியிருப்பது அட்டகாசம். பண்ணையார் எந்த பந்தாவும் இல்லாமல் ஊர் மக்களை தன் குடும்பத்தை போலவே நடத்துவது மனதுக்கு இதம் தருகிறது. ஊர் பசங்களிடம் நான் வந்ததும் எல்லாரும் ஏறிக்கலாம்னு அன்பாக சொல்வதும் இதம்தான். எழவு வீட்டிற்கு கார் அனுப்புவதோடு இல்லாது அதில் body-ஐயும் ஏற்றிச் செல்ல அனுமதிப்பது ஒரு புதிய அனுபவம். குளிச்சிருந்தான்னா இவனையும் கூட்டி போகலாம் என பண்ணையார் பீடையைப் பார்த்து சொல்லும்போது தியேட்டரில் குபீர்.

படத்தின் கதாநாயகி என்றால் பண்ணையாரின் மனைவியைத்தான் சொல்லவேண்டும். அவர் கண் மொழி அற்புதம். கணவர் மேல் அவர் வைத்திருக்கும் காதல் கண்ணில் வழிகிறது. தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் நெகிழ வைக்கிறது.பண்ணையார் மனைவி வாழ்ந்திருக்கிறார் படத்தில். வண்டியை ஓட்ட கத்து கொடுத்தால் வேலையை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் விஜய் சேதுபதி முழுதும் கற்றுக் கொடுக்காமல் டபாய்ப்ப்தும், அடிக்கடி பண்ணையார் ஒண்ணு ஆக்சலரேட்டர், இரண்டு ப்ரேக் அந்த மூணாவது என்னப்பா என்று கேட்டு கிளட்ச் என்று தெரிந்து கொள்வதும் நல்ல சிரிப்பு. கார் மீது பண்ணையாருக்கு அதீத காதல் என்றால் அவர் மனைவிக்கும், விஜய் சேதுபதிக்கும் அதே அளவு கார் மீது பாசம்.

காவி கோடுகள் போட்ட பழைய ஒட்டு வீடு, மாட்டு வண்டி, வாசலில் வாழை மரம், வைக்கப்போர் என அசல் கிராமத்து வீடு கண்முன். Premier padmini காலத்து அண்ணாமலை சினிமா போஸ்டர் என எல்லாம் கச்சிதம். சேதுபதி இறந்தவர் வீட்டில் பெண்ணை அப்படி காதலாக நிறைய நேரம் பார்ப்பது அருவருப்பையே தருகிறது. அவர் காதலியாக வரும் பகுடர் போடாத பெண் கண்ணாலேயே கதைகள் பல சொல்கிறார். படத்தின் பலம் பீடை. அவர் முன்னாடி உட்கார ஐந்து ரூபாய் கேட்பதும் அதை சேகரித்து பையன் வரும் போது கார் வேறு இடத்துக்கு போய்விடுவதும் பின் சில வருடம் கழித்து பெரியவனான பிறகு சொந்த காரில் ஊருக்கு வந்து பழைய ஞாபகங்களில் திளைத்திருக்கும்போது சேதுபதி TCX 1104-ல் வந்து `உங்க காரா? இல்லன்னா நான் டவுனுக்குத்தான் போறேன் .வாங்க எனகூப்பிடுவதும் நான் முன்னாடி சீட்டுல உக்காந்துக்கவா என கேட்டு பயணிப்பதும் நெகிழ்ச்சி.

படத்தில் மற்றபடி பெரிதாக சொல்ல எதுவுமில்லை. குறைகளுமில்லை. கொஞ்சம் ஜவ்வு போல இழுத்திருக்கிறார்கள்.கொட்டாவி வரவில்லை.

Friday, February 7, 2014

அடையாளம் துறந்தவன்



சமீபத்தில் பதவி உயர்வு பெற்று Managaer [Branch Operations]-ஆக Madras University State Bank கிளையில் பொறுப்பெற்றுக் கொண்டது என் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் எனக்கு அது பலவிதங்களில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்தையே கொடுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பேரிழப்பு என்று சொன்னால் என் பேர் சொல்லி கூப்பிடும் என் சக ஊழியர்களை முற்றிலுமாக இழந்து தனிமைப்படுத்தப் பட்டுவிட்டேன். Accountant என்ற பதவியின் பெயரால் மட்டுமே வங்கியில் ஊழியர்களாலும் வாடிக்கையாளர்களாலும் அழைக்கப்படுவது அவர்களிடமிருந்து ஒட்டாது விலகி இருக்கும் ஒரு உணர்வை உண்டாக்கி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிலைக்கு என்னை கொண்டு சென்று விட்டது. இப்படியே போனால் என் பேரே எனக்கு மறந்துவிடும் போலுள்ளது. அதுக்குதான் officer ஆனா visiting card-லாம் அடிச்சிக்கறாங்களோ? முரளி, முரளி சார், இலால்குடி முரளி சாரா என்று நாலு திசையிலும் திருச்சி கிளையில் ஒலித்த குரல்கள் பழங்கதையாகிவிட்டது. மேலும் பதவி உயர்வு இலக்கிய உலகினுடனான என் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டது என்றே சொல்லலாம். சிற்றிதழ்கள் சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. யாராவது தகவல் சொன்னால் திருவல்லிக்கேணி திருநெல்வேலி போளி ஸ்டால் போளி courier-ல் அனுப்பி வைக்கப்படும். தபால் செலவு தனி. புத்தக கண்காட்சி அருகாமையில் தொடங்கிவிட்டது. வாங்க பணமிருந்தாலும் படிக்க நேரமில்லை. கண்டிப்பாக இந்த முறை வழக்கத்தைவிட அதிக புத்தகங்கள் வாங்கபோகிறேன் படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். கடல் காற்று ஒவ்வாமையால் சற்றே என் உடல்நலத்தையும் தொலைத்தேன். சென்னையில்தான் அடையாளத்தைத் தொலைத்து விட்டேன் என்று நினைத்தால் சொந்த ஊரிலும்தான். 20 ஆண்டுகள் நான் உருண்ட அறையை இழந்துவிட்டேன். இந்த முறை பொங்கலுக்கு ஊருக்கு வந்தபொழுது 22 வருடம் வசித்த வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் வந்த உணர்வு இருந்தது. அப்பா அம்மா பக்கத்தில் இல்லாமல் 50 வயது குழந்தை ஏங்குகிறது என்று புவனா சென்னையில் சொல்வது ஒரு விதத்தில் சரிதான். அவர்களும் அங்கு வந்தால்தான் ஒரு நிறைவு வரும். நம்பிக்கைதான். நடக்கும். இவ்வளவு மனக்கசப்பைக்கொடுக்கும் பதவி உயர்வு தேவையா? என்ன செய்வது. நானும் ஒரு பண விரட்டிதான். எல்லா வசதியும் கொடுக்கறாங்க.அனுபவிக்க நேரமில்லை. ஆசையில்லை. 24மணி நேரம் ஒரு நாளைக்கு என்பதை எப்படியாவது அதிகம் பண்ணச் சொல்ல வேண்டும்.

அடைக்காத கடன்களை விட.........




ஐபிஎல் என்னும் மாயச்சக்கரம்


ஒவ்வொரு வருடமும் இப்போது ஏப்ரல் மே வந்தால் ஐபிஎல் என்னும் முரட்டு கிரிக்கெட் போட்டித் தொடர் அதீத விளம்பரத்துடன் பெரு நகரங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது. இது பெரும் பணம் பண்ணும் தந்திர விளையாட்டுத் தொடர்.இந்த தொடர் நடக்கும் இரு மாதங்களும் உலக அளவில் எந்த டெஸ்ட் தொடர்களோ அல்லது ஒரு நாள் போட்டிகளோ நடத்தப்படுவதில்லை.காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கனமான கல்லாப்பெட்டி.கிரிக்கெட் நிர்வாகம் உலக அளவில் ICC கட்டுப்பாட்டில் உள்ளது என்று யாராவது சொன்னால் அது கட்டுக்கதை. BCCI சொல்வதுதான் சட்டம் என்பது DRS விஷயத்திலேயே வெளிப்படை.நாளைக்கு மூணு ஸ்டம்ப் வேணாம் ரெண்டு போதும்னு BCCI சொன்னா உடனே தலையாட்ட வேண்டிய கட்டாயம்.ஒரு காலத்தில் இந்த விளையாட்டில் வெள்ளையர்களின் ஆதிக்கம்[ஒரு காலத்தில் அவுஸ்த்ரேலியாவில் ஓவருக்கு எட்டு பந்து] இருந்தது போய் இப்போது இதை தன் சந்தைப் படுத்தும் திறனால் BCCI தன் வசமாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறது.

இங்கு திருவல்லிக்கேணியில் நம் இல்லத்துக்கு அருகில் வசிக்கும் முன்னாள் சர்வதேச நடுவர் [ முன்னாள் ஸ்டேட் வங்கி வூழியரும் கூட] நம் பெயர் கொண்ட முரளி அவர்கள் செவ்வாய் நான் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த போது இன்று கடைசி போட்டி சென்னையில் கண்டிப்பாக பாக்கறீங்க மனைவியுடன் என்று வற்புறுத்தி மூன்று டிக்கெட்டுகளைத் திணித்தார். இதற்கு முன் இவர் சென்னையில் நடந்த போட்டிகளுக்கு கொடுத்த டிக்கெட்டுகளை கீழே இருக்கும் சிறுவர்களுக்கும் அலுவலக நண்பர்களுக்கும் கொடுத்து என் பொன்னான நேரத்தை காத்தேன்.நான் போக வில்லை என்பதை அவரிடமே வெளிப்படையாக ஒப்புக் கொண்டேன்.புவனாவுக்கு இந்த கிரிக்கெட் சமாச்சாரத்தில் எல்லாம் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இன்னும் கல்லா மண்ணா, பாண்டி,ஐஸ் பாய்,குச்சி விளையாட்டு என்ற அளவிலேயே நிபுணத்துவம் கொண்டவர்.இரவு எட்டு மணிக்கு தொடங்கும் போட்டிக்கு நான் வீட்டுக்கு வந்து டிபன் முடித்து எட்டு மணி வாக்கில் வீட்டிலிருந்து கிளம்பி நடந்து சேப்பாக்கம் சென்று பரிசோதனைகள் முடிந்து உள்ளே செல்லும்போது கிட்டத்தட்ட ஐந்து ஓவர்கள் முடிந்து விட்டன. ஒரு பக்கம் CHEER GIRLS-களின் அலங்கோல ஆட்டம்.அதை வாய் பிளந்து பார்க்கும் கூட்டம்.இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கும் கிரிக்கெட் ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம். அந்த காலம் முதல் இந்தியர்களுக்கு சினிமா என்றால் ஒரு கவர்ச்சி நடனம் கட்டாயம் இருந்தாக வேண்டும்.அது ஹிந்திப் படமானாலும் தமிழ்ப் படமானாலும் சரி.இந்தியர்களின் இந்த WEAKNESS-ஐ நன்றாக புரிந்து கொண்டு BCCI கோஷ்டி இதை அமுல் படுத்திவிட்டது.இவர்கள் வீட்டுப் பெண்களை இப்படி ஆட விடுவார்களா? அப்புறம் மைதானத்தில் காதைப் பிளக்கும் அளவுக்கு குத்துப் பாட்டுக்கள் ஒலிபரப்பப் பட்டு அதற்கு ஆபாச நடனம் ஆடும் ரசிகர் கூட்டம் பெண்கள் உட்பட. தலையில் முள்ளம்பன்றி போல கலர் கலராக மலிங்கா பாணியில் ஒரு கூட்டம்.கன்னத்தில் தங்கள் அபிமான அணியின் லோகோவை பெயிண்ட்டில் வரைந்து அலையும் கூட்டம் ஒன்று.இதை சுரண்டி எடுக்க இரண்டு நாளாகும்.எனக்கு பக்கத்தில் தன கணவர் மகனுடன் வந்திருந்த ஒரு 45 வயது பெண்மணி வாய்க்குள் இரு விரலை விட்டு விசிலடித்த காட்சி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.திடீரென ஒரு பெண் போட்ட ஆபாச குத்தாட்டம் கிரிக்கெட்டிலிருந்து கவனத்தை திருப்பியது. அப்போது சேவாக் அவுட்டாகி திரும்ப அவர் எப்படி அவுட்டானார் என என் பக்கத்திலிருந்த அலுவலக ஊழியரைக் கேட்க அவர் தெரியாதென சொல்ல இந்த பக்கம் இருந்த இன்னொருவரைக் கேட்க அவர் நான் பாக்கலீங்க என அசடு வழிந்தார்.இதிலே ஏற்பாட்டாளர்கள் மைக்கில் தோனிக்கு ஒரு விசில் போடுங்க குசு போடுங்கன்னு ஒரே அலப்பரை.மைதானத்தில் வளம் வரும் உணவுப் பொருட்களின் விலையோ பயங்கரம்.ஒரு கப் பெப்சி 40ரூபாய் சப்பாத்தி 60ரூபாய் பிஸ்ஸா 350ரூபாய்.வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை.தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையிலும் பன்மடங்கு மின்சாரத்தை குடிக்கும் மைதானத்தின் ராட்சச இரவு விளக்குகள் உறுத்தின.இவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு நூறு ரூபாய் போடலாம்.மூன்று மணி நேரத்தை வீணடித்த கவலையோடு கசகசவென வீடு திரும்பினேன்.இவ்வளவு சொல்றே ஏன் போனே என கேட்பவர்களுக்கு என் காலத்து நாயகன் கபில் தேவ் சொன்னதை சொல்கிறேன்`We will have to learn the ways of a brothel`.போட்டி டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை 750.உச்ச விலை 6000க்கும் மேலே.டிக்கெட்டுகள் அனைத்து விற்பனையாவதில்லை.முன் நாட்களில் டிக்கெட் எடுப்பவர்கள் முட்டாள்கள்.போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் மஞ்சள் சட்டை அணிந்த வாலிபர்கள் டிக்கெட்டுகளை கையில் அடுக்கிக்கொண்டு எவ்வளவு வச்சிருக்கே?எறநூரா இந்தா.அண்ணே நூறு ரூபாதான் இருக்கு.கொண்டா போ உள்ளே.இப்படி இதன் மூலம் கருப்பு வெள்ளையாகுதோ?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இதற்கு நடுவில் இன்று வெளியான match fixing விவகாரம் ஐபிஎல்-ன் விகார முகத்தை காண்பித்துவிட்டது.இது குறித்து நான் முன்னர் சொன்னபோது கைலாஷ் போன்றவர்கள் நம்பவில்லை.இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.ஐபிஎல்-ஆல் சில நன்மைகள்தான்.அதிகம் அறியப்படாத ஆட்டக்காரர்கள் வெளிச்சத்துக்கு வருவது.உதாரணம் பின்னி,விஸ்வநாத்.டிராவிட் போன்றவர்களின் இன்னும் தொடரும் form.தீமைகளோ பல.டெஸ்ட் கிரிக்கெட்டை அடியோடு அழிக்க வல்ல ௨௦-௨௦ ஆட்ட போட்டிகள்.இரு மாதங்கள் சிறுவர்களின் அறிவுத் தேடலை அழிக்க வல்ல கிட்டத்தட்ட அறுபது போட்டிகள் கொண்ட தொடர்.

IPL என்னும் மாயப் பேயைக் கொன்று போட வேண்டும்,
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும். ஐபிஎல் போட்டிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதை பத்திரிகைகள் நிறுத்த வேண்டும்.நவ்ஜோத் சித்து போன்ற கூச்சல் போடும் கோமாளிகளை சேனல்கள் புறக்கணிக்க வேண்டும்.


தங்க மீன்கள்-திரை விமரிசனம்


திருமண நாள் வெள்ளிக்கிழமை அமைந்ததும் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாததும் கொண்டு முன்னதாகவே இயக்குநர் ராம் மீது நம்பிக்கை வைத்து சத்யத்தில் `தங்க மீன்கள்` படத்திற்கு சனிக்கிழமை மதியக் காட்சிக்கு முன் பதிவு செய்திருந்தேன். ராம் ஏமாற்றவில்லை. குழந்தைகளின் வெளிப்படையான எண்ணங்கள் பேச்சுகள் வாயிலாக படத்தின் முக்கிய காட்சிகள் நகர்வது மனதை மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வைத் தருகிறது.படம் வந்த இரண்டாம் நாளே நிறைய இருக்கைகள் காலியாக இருந்தது இது போன்ற பட முயற்சிகளுக்கு நம் மக்கள் தரும் வரவேற்பை வெளிச்சம் போட்டு காட்டியது.பட ஆரம்பத்தில் வரும் குளம் தங்கமீன் குறித்த உரையாடல் கடைசி வரை சாதனா எங்கேயாவது யாரும் பார்க்காத ஒரு தருணத்தில் குளத்தில் இறங்கி விடுவாளோ என்ற பயத்தை உண்டாக்குகிறது. சாதனாவின் கண்களில் தெரியும் ஒளி மற்றும் நடிப்போரை அருகாமையில் [ closeup] காண்பிப்பதும் அருமை. w m குழப்பம் வரும் போது` tare zamin per`போன்ற படமோ என்று சந்தேகம் எழுகிறது.தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை ராம் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரை இசைப் பாடலை கேட்ட திருப்தி `ஆனந்த யாழை மீட்டுகிறாய்`பாட்டின் மூலம் எழுகிறது. யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி.

அம்மா இன்னிக்கு பூரி பண்ணுவதால் தங்க மீனாக மாறுவதை தள்ளிப்போடும் சாதனாவின் தோழிதான் என்னைக் கவர்ந்த கள்ளி.ஜன்னலின் அருகில் சாதனாவும் பூரிக்குட்டியும் நிகழ்த்தும் உரையாடல் தூள்.பட முடிவில் மூன்றாம் பரிசு வாங்கும் மாணவனுக்கு தோழி கை தட்டுவது ஏன் என்பதற்கு `அவன் மத்யானம் டிபனுக்கு பூரி கொண்டு வந்திருகான்ல?`என்று பூரிக்குட்டி சொன்னதும் என் கண்ணின் ஓரத்தில் வழிந்த கண்ணீரை புவனாவுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். எனக்கும் பூரி என்றால் இஷ்டம் என்பதாலோ?
டிவி-ல வரதை எல்லாம் நாம வாங்கி கொடுக்க முடியுமா என்று தங்கை கேட்கும்போது அப்பா அவன் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்னு போட வேண்டியதுதானே என்று ராம் சொல்வது இயலாமையின் உச்சத்தை காட்டுகிறது.

படத்தின் பெரிய சொதப்பல்கள் 1.டீச்சர், அவர் கணவர், ராம் வரும் காட்சி. பொருந்தா திருமணமோ என்று குழப்பத்தை கொடுத்து சொதப்புகிறது.2. ராம் தேவையில்லாமல் மலையில் தொங்குவது.3.Fort Cochin-ல் காட்ட பல இடங்கள் இருந்தும் சைனீஸ் நெட்டை மாத்திரம் காண்பித்து ஏமாற்றுவது.

குழந்தை சாதனா நிறைய விருதுகள் வாங்கப்போவது நிச்சயம். ராமின் சோதனை முயற்ச்சிகள் தொடரட்டும்.


தலைமுறைகள் -சினிமா விமரிசனம்

நீண்ட நாள் கழித்து வாத்தியார் பாலு மகேந்திராவின் படம் வெளியாவது எனக்குள் ஒரு புத்துணர்வைத் தந்து சத்யத்திற்கு ஓடி முன் பதிவு செய்ய வைத்தது. பாலு மகேந்திரா அவர்கள் இளையராஜா மீது வைத்திருக்கும் அதீத மரியாதை கலந்த நட்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பாலு படம் என்றால் இசைஞானி ஒருவித தனி ஈடுபாட்டோடு இசை கூட்டுவது நீண்டு தொடரும் ஒரு கதை. கடைசிவரை அரங்கம் செல்லும் வரை என்ன படம் என்பதை புவனாவிடம் சொல்லவில்லை. `பிரியாணி`யாங்க`தகறாராங்க என்று `தலைமுறைகள்` தவிர்த்து பிறவற்றை கேட்டவரிடம் ஒரு தெலுங்கு படம் போறோம் என்று சொன்னவுடன் `முதல்லேயே சொல்லிருந்தா கிளம்பியிருக்க மாட்டேன்` னு சொல்லிட்டு எதுக்கும் மரோசரித்ரா ரேஞ்சுக்கு இருக்குமோ-ன்னு சபலத்தோடு கிளம்பினார்.

இரண்டாவது நாள் என்ற போதிலும் அரங்கு நிறையவில்லை. ஒரு நல்ல கலைஞனுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் வழக்கமாக கொடுக்கும் மரியாதை சற்றும் கூடவில்லை.

திரைப்படத்தில் பங்களிப்பு அளித்தவர்களின் பெயர்கள் வித்தியாசமான எழுத்துருவில் வடிவைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுகாவுக்கு நன்றி என போடப்பட்டதும் தமிழ்த் திரையுலகம் மதிக்க மறந்த பாலு அவர்களின் தலையாய சீடன் சுகாவை சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவருடைய `படித்துறை` படம் எடுக்கப்பட்டு முடங்கிக்கிடப்பது குறித்து இரு ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். தயாரிப்பாளருக்கும் ஒரு முட்டாள் பைனான்சியருக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனை விவகாரத்தால் தன் படம் முடங்கிக் கிடப்பதை வருத்ததோடு சொன்னார். Title போடும் போது இசைஞானி இளையராஜா பெயர் போடப்பட்டபோது கைதட்டல். படம் ஆரம்பித்த உடனே இளையராஜாவும் பினனணியில் பங்களிப்பை ஆரம்பித்துவிடுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் தொடராக வந்த கதை நேரத்தில் வந்த நடிகர்கள் சிலர் வருவது அந்த தொடரின் மற்றொரு Episode-ஆகவே நினைக்க வைக்கிறது.மகன் கிருஸ்தவ மதப்பெண்ணை மணமுடித்ததால் `பொணத்துக்கு கூட வரக்கூடாது` எனக் கடுமை காட்டும் பாலு. அந்த பழைய வீட்டின் சன்னல் பக்கத்தில் அவர் உறங்கும் காட்சியின் lighting அற்புதம். நீண்ட நாட்கள் கழித்து வரம் மகனை உள்ளே அனும்திப்பாரோ என நாம் பதறும்போது `டேய்.shoe-வை கழட்டுடா` எனும்போது கல்லுக்குள் ஈரம். குழந்தைகளின் பெயர்களுடன் `பிள்ளை`சேர்க்க சொல்லி தாத்தா சொல்லியிருப்பது தமிழ் சமுதாயத்தில் வேரூன்றிக்கிடக்கும் சாதி பிடிமானத்தை படம் போட்டு காட்டுகிறது. `வாடா லஷ்மணா` என்று நண்பனை அழைக்கும் குரல் இன்னும் காதில். தமிழ் தெரியாத பேரனும் ஆங்கிலம் தெரியாத தாத்தாவும் சந்திக்கும் முதல் காட்சியில் பேரனின் அப்பா பெயரை கேட்டு தன் ரத்தம் என்றதும் காட்டும் பாசம். பேரனை கூட்டிக்கொண்டு அவர் வெளியே போகும்போது கிராமத்தின் அழகியலைக் காட்ட நம்மையும் அழைத்து செல்கிறார் பாலு. குறிப்பாக பேரன் காலையில் `Where are you going?` எனக்கேட்டதும் `ஆத்துக்கு`என்று அவர் கூற `ஆத்துக்கு means`என்றதும் `உன் அம்மாவைகேள்` எனச் சொல்ல பையன் அம்மாவிடம் `அம்மா ஆத்துக்கு means`எனக்கேட்டதும் அவர் `river`இரு சொல்ல பையன் `river means`என்று கேட்கும்போது நாம் நம் நதிகளை நாட்டில் பராமரிக்கும் அவல நிலையை குத்திக்காட்டுகிறார் பாலு. நதிக்கரைக்கு பாலு பேரனை அழைத்து செல்லும் காட்சி அற்புதம். இது போன்ற ஆற்றை அழகாக படம் பிடித்தவர் யாரும் இலர். அது எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணமே என் மனதில் ஓங்கி இருந்தது. ஆற்றங்கரை அருகில் காட்டில் தாத்தாவும் பேரனும் நடக்கும் காட்சியில் இளையராஜா பின்னணியில் ஒலிக்க வைக்கும் பறைவகளின் ஒலிகள் காதுக்கு விருந்து.மனதிலே சிலிர்ப்பு.மேதமையின் வெளிப்பாடு.[ மழைக் குருவியின்மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கும் அற்புத ஒலி, அக்கக்கா குருவியின் ஓசை ஒலி] `தியோடர் பாஸ்கரனின்` கட்டுரையை படமாக்கியது போன்ற ஒரு அற்புத நிலை. ஒரு இடத்தில் விடியலை பாலு படமாகியிருக்கும் விதம் அட்டகாசம். நீண்ட நாள் கழித்து பயந்து கொண்டே வரும் மகனின் நண்பனைப் பார்த்து`எங்கடா ஆளயே காணோம்.திருட்டு கல்யாணத்துக்கு கையெழுத்து போட்ட பய இல்ல நீ`எனும் போது குபீர் என்ற சிரிப்பலை அரங்கில். பேரனும் தாத்தாவும் ஆளுக்கொரு மரத்தடியில் ஒதுங்கும்போது பேரன் `Grandpa, that tree is burning`எனும் போது `பின்னாடி நம்ம லஷ்மனந்தான்.அவனுக்கு சுருட்டு புடிச்சாதான் வரும்`எனும்போதும் சிரிப்பு. பேரனுக்கு தாத்தா திருக்குறள் சொல்லித்தருவதும் தாத்தாவுக்கு பேரன் jack அண்ட் jill சொல்லித் தருவதும் அருமையான location-ல் படமாக்கப்பட்டுள்ளது.

மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக வளரும் அன்னியோன்யம் கவித்துவமாக படமாக்கப்பட்டுள்ளது.அரங்கை விட்டு வெளியே வந்தும் அகலாதவை பாலுவின் சற்றே விந்தி நடக்கும் காட்சியும் ஜன்னல் அருகே சாய்வு நாற்காலியில் அவர் குறுந்தூக்கங்கள் போடும் காட்சியும்தான். இது போல குறைந்த budget-ல் நிறைவாக எடுக்கப்படும் படங்களுக்கு அதிக வரவேற்பை கொடுக்க தமிழர்கள் முன் வரவேண்டும்.

திரை விமரிசனம்-- இது நம்ம கிராமம்

சத்யத்தில்தான். ஆனால் இந்த முறை தனியாக.எல்லோரும் சேர்ந்து போவதற்குள் படம் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக.படம் வந்த இரண்டாம் நாள் கொட்டகை வெறிச்.வெளியே பிராமணாள் மட்டும் என்று போட்டிருக்கிறதோ என்று ஒரு சந்தேகம்.படம் ஆரம்பிக்கு முன் பக்கத்து சீட் மாமா மாமியிடம்`கோலங்கள்ல தேவயானி மாமனாரா வருவானே அவன் எடுத்த படம்`னு விளக்கம்.

1938-45 காலகட்டத்தின் அக்ராஹர சூழ்நிலை படமாக்கப்பட்டுள்ளது.கேரளம் மற்றும் நாகர்கோயில் பகுதிகளில் அக்ரஹாரத்தைத்தான் கிராமம் என குறிப்பிடுவர். ராவ்பகதூர் சுப்பிரமணிய சர்மாவின் மகனின் பூணல் கல்யாணத்தில் படம் ஆரம்பிக்கிறது.வீட்டில் ஆச்சாரமாகவும் குடும்பத்தினரிடம் கறாராகவும் இருக்கும் மணி சாமி சின்ன வீட்டுக்கு போகும்போது சுபாவம் மாறி விடுகிறார். ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பெண்கள் என்று வரும்போது கடுமையான கட்டுப்பாடுகள்.அதுவும் விதவைப் பெண்களுக்கு குறிப்பாக.படத்தில் பாட்டியாக வரும் சுகுமாரியின் நடிப்பு அற்புதம்.குறிப்பாக நாவிதர் அவர் தலையை மழிக்கும் காட்சியில் அவர் காட்டும் முக பாவனைகள் பிரமாதம்.நாவிதர் மாஸ்டராக வரும் நெடுமுடி வேணுவிடம் `இது வில்சன் துரை கொடுத்த கத்தியாக்கும்`என்பதும் அதே வசனத்தை பாட்டியிடமும் சொல்வதும் நல்ல நகைச்சுவை. சற்றே மனநிலை பிறழ்ந்தவராக வருபவர் [பெயர் முடிவில் ஏதோ கலாமண்டலம்-னு வருகிறது]`மாஸ்டெர் அக்குளை செரச்ச கத்திதான் பாட்டி தலையையும் சிரைக்குதுது`னு அங்கதமாக சொல்கிறார்.பாத்திமா பாபு மற்றும் அவரது அக்காவாக வரும் Concubine பாத்திரம் நாராயணி,நெடுமுடி வேணு இவர்களது வீட்டு நடைமுறைகள் முரணாக [listless] அரைவேக்காட்டுத்தனமாக படைக்கப்பட்டுள்ளன. Y.G.மகேந்ரா நளினி பாத்திரங்கள் படத்தின் பெரும் பலவீனம். வீட்டின் புழக்கடை அட்டகாசம். கல்யாணத்திற்காக பத்து வயது பெண் அதிகாலையில் எழுப்பப்படுவதும் அது இன்னும் தூக்கம் வருதும்மா என்று அழுவதும் ஊஞ்சலில் தூங்கித் தூங்கி வழிவதும் வெகு இயல்பு.அந்த காலத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கூட எளிமையாக கொஞ்ச நபர்களுடன் திருமணம் நடத்துவதை நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இன்று கும்பலைக் கூட்டி ஏகப்பட்ட அயிட்டங்களைப்போட்டு ஜனங்களை திணறடிக்கும் கூட்டம்தான் அதிகம். இவர்கள் ஜீரணத்திற்கு Gelusil பாயாசம் போடலாம்.ஒரு கால கட்டத்தை ஒட்டி எடுக்கப்படும் இது போன்ற படங்களில்தான் அந்த காலத்து கில்லித்தாண்டு, பேப்பந்து போன்ற இன்று அருகிப்போன விளையாட்டுகளை காண முடிகிறது.

ஒளிப்பதிவு அதிஅற்புதம்.நெடுமுடி வேணு கோக்ஷ்டியினர் நடத்தும் கூத்துக் காட்சிகள் அபாரம்.கொஞ்சம் தமிழுக்கு புதியது என்பதால் ஒரு பாத்திரம் மூலம் விளக்கியிருக்கலாம். இசைக்கூட்டலில் இன்னும் ஈடுபாடு இருந்திருக்கலாம். Period படங்கள் எடுக்கும்போது சிறுசிறு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் கொள்ள வேண்டும்.`பரதேசி`,`நாடோடித் தென்றல்`படங்களில் இதை முழுமையாகக் காணலாம். ஆனால் இதில் நாதஸ்வர வித்வான் ஒரு இடத்தில் வாட்ச் கட்டிக்கொண்டு வாசிப்பது முரண்.எனக்கு தெரிந்து அந்த காலகட்டத்தில் பாக்கெட் வாட்ச்-தான்.

மோகன்சர்மாவிடம் பணம் இருக்கிறது.அதனால் இது போன்ற படத்தை எடுத்து தன் கலை அரிப்பை நிவர்த்தி செய்து கொண்டுவிட்டார்.இது போன்று சிறுதொகையில் படம் எடுக்கும் கனவு நமக்கும் உண்டு.காலம் கூடட்டும். நம் கனவும் நிறைவேறும்.

ஆடிய ஆட்டமென்ன ..............

பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும்வரை கடுமைமையான வேலைப்பளு. அதற்கு இரண்டு நாள் முன்னதாகத்தான் கைலாஷ் chicken-pox-ஆல் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு பத்து நாள் ஓய்விற்கு பின் கோவை கிளம்பி கல்லூரி சென்று அப்படியே பொங்கலுக்கு இலால்குடி வருவதாக திட்டம். முதலில் சமயபுரம் மட்டும் சென்று வருவதாய் இருந்த திட்டத்தை மாற்றி மேலும் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அப்படியே ஒரு வருடத்திற்கு மேல் போகாமல் விடுபட்டுப்போன குலதெய்வம் வைதீஸ்வரன்கோ விலுக்கும் போக முடிவெடுத்து எல்லாவற்றையும் மாற்றியமைத்தேன். திட்டமிட்டபடியே எல்லா நடக்க வைத்தீஸ்வரன்கோவில் போய் திரும்பி இலால்குடி நெருங்கையில் நெற்றிப்பொட்டில் ஊசி குத்துவது போன்ற ஒரு உணர்வு. வீட்டுக்கு வந்து முகம் கழுவியபின் முகத்தை கண்ணாடியில் பார்க்கையில் நெற்றி முழுவதும் சிறுசிறு வேர்க்குரு போன்று இருந்தன. முதுகும் சற்று அரிக்க புவனாவும் கைலாஷும் அம்மை என்று உறுதி செய்தனர். மேனேஜர் முதலிலேயே சொன்னபடி தடுப்பு ஊசி போடாத தவறை உணர்ந்தேன். சரி மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க என்ன செய்யலாம் என உடன் யோசித்தேன்.சென்னை போய்விடலாமா? முடியுமா?விடுவார்களா? ஒரு வழியாக மாடி அறையில் quarantine-ல் இருக்க முடிவெடுத்தேன்.

அடுத்த நாள் காலை மேனேஜர்-க்கு தொலைபேசிவிட்டு கைலாஷ் ஆலோசனைப் படி Dr.சத்தியநாதனை சந்தித்து தீவிரத்தை குறைக்க முடிவெடுத்தேன். அவரும் Chicken-pox என உறுதி செய்து சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். புவனாவிற்கு வராமல் இப்போது தடுப்பூசி போட்டால் பலனிருக்காது என்பதையும் தெரிவித்தார். கைலாஷுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் நமக்கும் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக அம்மையின் தீவிரம் அதிகமாகி அடுத்த நாள் மெல்ல மெல்ல வேறு ஒரு உலகத்திற்குள் slip-ஆகி சென்றேன்.பசி தூக்கம் மறந்தேன் அடியோடு. கடும் உடல் வலி. தலை முதல் கால் முட்டி வரை மகமாயியின் தீவிர விளையாடல்.பிழைப்பதே கடினமோ என்ற எண்ணம் வேறு என்னுள். இந்த நேரங்களில் புவனாவின் மன உறுதியும்,கவனிப்பும்தான் என்னை சற்றே ஆசுவாசப்படுத்தும்.

நான்காம் நாள் நல்ல இரவுத் தூக்கதிற்குபின் விழித்த எனக்கு ஒரு புத்துணர்வு பாய்ந்தது போன்ற உற்சாகம். சற்று நேரத்தில் அகோரப் பசி. ஒரு சில இட்லிகளை விழுங்கியபின் மதியம் நல்ல பசியில் ரசம் மற்றும் மோர்சாதம். உள் அளவில் பழைய உற்சாகம் மீண்டும்.வெளித்தோற்றமோ மற்றவர்களை பயங்கொள்ளச்செய்யும் நிலை.

புதனன்று முதல் தண்ணீர் என்று அம்மாவும் புவனாவும் முடிவு செய்து காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பிலைகொத்துகளை போட்டு இயற்கையாக நீரை சூடுபடுத்தும் பணியில் இறங்கினர். மதியம் ஒருமணி வாக்கில் ஒரு பாத்திரத்தில் பாதம் பாயாசத்தை ஒத்த திரவத்தையும் [ பருத்திப் பால்-தழும்புகளை உடன் மறையச் செய்ய ] மற்றொரு கிண்ணத்தில் பச்சையாக நல்ல வாசனையோடு சரவண பவன் சட்னியை நினைவு படுத்தும் கலவையையும் ஒப்படைத்து நன்றாக உடலில் தடவி சற்றே ஊறியபின் குளிக்க சொன்னார்கள்.அப்படியே துணியில் வார்த்த இட்லி ரெண்டு கொடுத்தா உள்ளே உடறேன்னு சொன்னேன். எப்பவுமே எனக்கு துணியில் வார்த்த இட்லிதான் பிடிக்கும்.அதன் clone-ஆன வழவழ-ன்னு இருக்கும் குக்கர் இட்லியை கண்டால் எனக்கு ஆகவே ஆகாது. பின்னர் கைபேசியில் நண்பர் சேகருடன் பேசும்போது `இப்போது நான் படுத்திருப்பது.நீ காலில் அடிபட்டு படுத்தது இதெல்லாம் நமக்கு ஒருவகை forced ரெஸ்ட்-தான்.இல்லாவிட்டால் நாம ஓடிக்கிட்டேதான் இருப்போம்`னு சொன்னேன்.

என்ன புத்தகக் கண்காட்சிக்கு போக போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடி. நல்ல வேளை.கடைசி நாள் சென்ற நண்பருக்கு கைபேசி வாங்க உத்தேசித்த புத்தகப் பட்டியலை சொல்ல அவர் அப்படியே வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

வெள்ளை யானை- ஜெயமோகன்
அஜ்னபி - மீரான் மைதீன்
தூப்புக்காரி- மலர்வதி
வெலிங்டன் - சுகுமாரன்
பூக்குழி- பெருமாள் முருகன்
மரப்பல்லி- வா.மு.கோமு
ஜின்னாவின் டயரி - கீரனூர் ஜாகிர்ராஜா

இந்த முறை புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சம் காலச்சுவடால் வெளியிடப்பட்ட மருதுவின் கைவண்ணத்திலான பெண் ஆளுமைகளின் காலண்டர்.

இப்படியே மேலும் ஐந்து நாள் ஓய்விற்குப்பின் திங்கள் சென்னை திரும்பினோம்.30 அன்று முதல் வங்கிக்கு செல்ல முடிவு.

6174- புத்தக விமரிசனம்

புத்தகம் : 6174

எழுதியவர் : கஸ்தூரி சுதாகர்

வெளியீடு : வம்சி பதிப்பகம்

விலை : Rs.3௦௦

6174 என்ற நாவல் குறித்து என் சகோதரர் ராஜேஷ் சிலாகித்து எழுதப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய அடுத்த நாள் வம்சிக்கு போன் செய்தேன். பவா.செல்லத்துரைதான் எடுத்தார்.` உங்கள் வங்கி கணக்கு எண் சொல்லுங்கள். பணம் அனுப்புகிறேன். 6174 ஒரு பிரதி அனுப்பிக் கொடுங்கள்` என்றேன். `பணம் இருக்கட்டும் முதலில் உங்கள் முகவரியைச் சொல்லுங்கள்.இன்றே அனுப்பி வைக்கிறேன்` என்றார். புத்தகமும் வந்தது. படிக்காமலே இரண்டு மாதம் வைத்திருந்தேன். உடல் நலம் தேற மருத்துவ விடுப்பில் ஓய்வு எடுக்கும்பொருட்டு சென்னை வந்திருந்த கைலாஷ் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டி கேட்க 6174-ஐ கொடுத்தேன். படித்துவிட்டு அருமை என்றான். பொங்கலுக்கு இலால்குடியில் போணி பண்ணிவிட வேண்டியதுதான் என நான் பையில் வைத்துக்கொண்டேன்.

நாவல் நன்கு விறுவிறுப்பாக எழுதப்பட்ட ஒன்று. தமிழில் ஒரு சீரிய முயற்சி. ஆசிரியர் சுதாகருக்கு பாராட்டுகள். Dan Brown-ன் பாதிப்பு நாவல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. சுஜாதா இருந்திருந்தால் சுதாகரைக் கொண்டாடியிருப்பார். அருமையான விமரிசனம் கொடுத்து `எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்` என அடையாளம் காட்டியிருப்பார். சுலபத்தில் புத்தகக் கண்காட்சியில் லட்சம் பிரதி விற்றிருக்கும். இதே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் மில்லியன் கணக்கான விற்பனையை எதிர்கொண்டிருக்கும். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இதைப் படிக்க ஆலோசனை சொல்லலாம். கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லை.

+கள்

அனகோண்டா பெயர்க்காரண விளக்கம் அற்புதம். நாவலின் அசாத்திய வேகம் வாசகனை பிரமிக்க வைக்கிறது. கோலத்தில் இவ்வளவு விஷயமா? எனக்கு கோலம்னாலே மைக்கேல்மதனகாமராஜனில் பாட்டி பேசும்` என் பேத்தி வாசல்ல கோலம் போட்டுண்டிருந்தா. இந்தப் படுபாவி அலங்கோலம் பண்ணிட்டான்`-ங்கிற கிரேசியின் வசனம்தான் ஞாபகத்துக்கு வரும். `சுடலை` போன்ற அடித்தட்டு மக்களின் பெயர்களை பாத்திரங்களுக்கு சூடியிருப்பது வரவேற்புக்குரியது. 6174 நம்பர் குறித்த விளக்கம் நிஜத்தில் புல்லரிக்க வைக்கிறது. வாசகன் கண்டிப்பாக பேனா எடுத்து சரி பார்ப்பான். `ஹெர்மோப்ரோடைட்` `லோனார் லேக்` போன்ற பிரயோகங்கள் கூகுள் பார்க்கத் தூண்டும். கதை தன் முழு வேகத்தை லோனாரில் எடுக்கிறது. ரவி பாத்திரம் ஆரம்பத்திலேயே இவர்களுக்கு சமதையாக Jeffrey Archer-ன் A Matter of Honour-ல் வருவதுபோல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். கத்தி, இரத்தம்,வன்முறை குறைவு. பிரமிட் குறித்து நான் கேள்விப்பட்டதெல்லாம் அதற்குள் எதை வைத்தாலும் அதன் ஆரம்ப நிலையை அடையும் என்பதுதான். உதாரணத்துக்கு ஒரு பழைய சவரம் செய்த blade-ஐ பிரமிடுக்குள் வைத்தால் அது ஒரு நாளில் மீண்டும் சவரம் செய்யும் அளவுக்கு புதியதாக உருமாறிவிடும் என்பது போன்றவைதான். ஆனால் இந்த கதையில் பிரமிடுகள் பிரமிக்க வைக்கின்றன.

-கள்

விளிம்புநிலை வாசகர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பத்தி பிரித்தல் படுமோசம். ஆரம்ப கட்டங்களில் அனந்துவும்,ஜானகியும் புதிர் முடிச்சுகளை அவிழ்க்கும் வேகம் MGR படங்களை நினைவூட்டுகிறது. காதுகொடுத்து பொறுமையாக விஷயங்களை கேட்காமல் எப்போதும் சலித்துக் கொண்டேயிருக்கும் மெத்த படித்த கதைமாந்தர்களை படைத்திருப்பது வாசகனுக்கு வெறுப்பையூட்டுகிறது. சாரங்கன் போன்ற பத்திரங்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்து புஸ்-ஆகிவிடுகின்றன.. அடிக்கடி வெளியே போய் போன் பேசும் தேவராஜ் குறித்து சாதாரண என் போன்ற வாசகர்களுக்கே சந்தேகம் வரும்போது சடகோபன்&TEAM-க்கு சந்தேகம் வராதது நெருடலே.

400 பக்கங்களுக்கு மேற்பட்ட விஞ்ஞான புனைவு என்பது சாதரணமாக எல்லோருக்கும் கைகூடும் விஷயமல்ல. அதுவும் தமிழில். படிப்பு ஆர்வம் இப்போது குழந்தைகளிடத்து குறைந்து வருவதை இது போன்ற அறிவியல் புனைகதைகளை படிக்கத் தூண்டுவதன் மூலம் நிவர்த்திக்கலாம். இதன் வீச்சை பரவலாக்குவது நம் கையில்தான். தன் தின சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை டாஸ்மாக்கில் இழக்கும் தந்தைகளையே அதிக அளவில் கொண்டுள்ள நம் தற்போதைய சமூகம் இந்த புத்தகங்களையா தன் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும்?


`OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்



பொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் எனக்கு என்றுமே பெருவிருப்பம் இருந்தது இல்லை. மாமியார்களையும், அழகு சுந்தரங்களையும் [அடியாட்கள்] பார்த்து வெறுப்பே மிஞ்சியது.மக்களின் ரசனையை நினைத்து வேதனைதான் பொங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தினம் புவனா இரவு பத்து மணிக்கு மேல் ஏதோ தொடர் பார்ப்பதும் தொடர்ந்து கலகலவென்று சிரிப்பதுமாக இருந்தது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதில் விழுந்த வண்ணம் இருந்தது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று ஒரு நாள் பார்க்க உட்கார்ந்தேன். கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. இன்றைய அலுவலக சூழல் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வெடிச்சிரிப்பு,நொடிக்கு நூறு தரம் மச்சான் மச்சான் என்று அவர் சகாக்களை விளிப்பது,கார்த்திக்கின் காந்தக்குரல்,ராஜியின் அப்பாவித்தனம் எல்லாம் யதார்த்தமாக இருப்பது புத்துணர்ச்சியை பார்ப்பவர்களுக்கு தருவது நிதரிசனம். இவற்றுக்கெல்லாம் சிகரமாக தொடரில் இருக்கும் விஷயங்களாக எனக்கு படுபவை இரண்டு.








1. விஸ்வநாதனின் மேலாண்மை குணாதிசயங்கள். அவருடைய பதவிக்கேற்ற கம்பீரமான முடிவெடுக்கும் திறன், தன் கீழ் பணியாற்றுபவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் திறன், அவர்கள் மீது அவர் வைத்துருக்கும் அசாத்திய நம்பிக்கை, ஒவ்வொருவரையும் அவர் எடை போடும் திறன், கம்பெனியின் முன்னேற்றத்தை பற்றி எந்நேரமும் சிந்திக்கும் தன்மை, பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் உறுதி காட்டுவது போன்றவை அந்த பாத்திரத்தின் மேல் பெரிய அளவில் மரியாதையை உண்டு பண்ணுகின்றன. இவர் பாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதை அவர் பெயரில் இப்போது விளம்பரங்கள் வெளியாவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

2. லஷ்மி. இவர் முகத்தில் எப்போதும் ஒருவித புத்துணர்ச்சி. குரலோ கற்கண்டும் அதி மதுரமும் கலந்த ஒன்று. இளமைத் துள்ளல் நிரம்பிய இவர்தான் என்னைப் பொறுத்தவரை தொடரின் நாயகி. நிஜப்பெயர் மதுமிலா. இயல்பான அழகி.

மதனாக வருபவரும் அசத்துகிறார் அப்பாவியாக. அவர், அவர் காதலி மற்றும் அவர்களுடைய அலுவலகத்தோழி TRACK`ம் நன்றாகவே உள்ளன.

குறைகளும் உள்ளன. HR MANAGER விஸ்வநாதனிடம் பேசும்போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே தனியாக பேசுவது தொடர்வது மலின உத்தி. HARDWARE TEAM-ஆக வரும் குடி கும்பலின் பிதற்றல்கள் பெரும் பலவீனம். LAPTOP மற்றும் PROJECT விஷயங்களில் ராஜி மீண்டும் மீண்டும் அலட்சியமாக இருப்பதாக காட்டுவது இயல்பாக இல்லை.

எனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட `நுக்கட்` என்ற ஹிந்தி தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு இணையான ஒன்றை `OFFICE` பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். மற்ற தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரும் எரிச்சலையும்,பயத்தையும் இந்த தொடர் கொடுத்திருப்பது கண்கூடு. ஒளிபரப்பப்படும் நேரம் [10-10.45] கூட யாரையும் முணுமுணுக்க வைப்பதில்லை. `OFFICE` தொடர் ஒரு `STRESS RELEIVER`ஆக பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியுடன் உறங்க அனுப்பி வைக்கிறது. பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்குப் பின் எந்த தொடரும் என்னை எழுதத் தூண்டியதில்லை. TEAM OFFICE-க்கு என் வாழ்த்துக்கள். MAY THIS TRIBE INCREASE.